மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 மெகா ஜாக்பாட்.. கரண்ட் பில்லுக்கு பதிலாக வேலையை காட்டிய திமுக: அன்புமணி
சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் சுற்றிய விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.. இப்போது திமுக அரசுக்கு எதிராக அவர் வைத்துள்ள விமர்சனம் மீண்டும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது..
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக அறிவித்ததும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்..

அன்புமணி ராமதாஸ்
கடந்த காலங்களில் அவர் குறிப்பிட்டதாவது, "ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆகும்.. ஆனால், அதை செயல்படுத்தாமல் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை கொடுத்து மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்..
உண்மையாகவே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், முகாம்களில் பெறப்படும் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தொகையை வழங்கியிருக்க வேண்டும்.. வாக்குறுதி அளித்தவாறு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.. இல்லையெனில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்..
ரூ.5000 உரிமைத்தொகை
இதற்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதத் தொகையுடன் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு என மொத்தம் ரூ. 5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்..
அரசு கூறுவது என்னவென்றால், தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை நீதிமன்றம் மூலம் முடக்க சதி செய்கின்றனர், அதிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே முன்கூட்டியே நிதி வழங்கப்படுவதாகும்.. ஆனால், அரசியல் விமர்சகர்கள் இதனை ஒரு தேர்தல் கால தற்காப்பு நடவடிக்கை மற்றும் தோல்வி பயத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறுகின்றனர்..
அரிசி குடும்ப அட்டைதாரர்கள்
அன்புமணி ராமதாஸ் இதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்: "திமுகவின் இந்த நடவடிக்கை ஒரு கபட நாடகம்.. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தடை விதிக்கப்படாது என்பதை தெரிந்தும் முதலமைச்சர் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்..
2021 தேர்தலின் போது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை தருவதாக கூறி, ஆட்சிக்கு வந்த பிறகு தகுதிகள் என்ற பெயரில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் துரோகம் எதிர்கொண்டனர்.. மக்கள் இதை மறக்க மாட்டார்கள்..
டாஸ்மாக் மூலம் மக்களின் பணத்தைப் பறித்துவிட்டு அதையே உரிமைத் தொகை என்ற பெயரில் திரும்பத் தருவது மக்களை ஏமாற்றும் செயல்.. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு மூலம் ஒரு குடும்பத்திடமிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 25,000 வசூலித்துக் கொண்டு இப்போது ரூ. 5,000 வழங்குவது ஈடாகாது.. ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், மேலும் கடன் எடுத்தே இந்தத் தொகை வழங்கப்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்..
நெருங்கும் தேர்தல்
அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ள நிலையில், திமுகவின் ரூ. 5,000 வரவு வைக்கும் நடவடிக்கை அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது..
உழவர் நலத் திட்டங்கள், மாணவர் கல்விக் கடன் ரத்து போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறி, தேர்தலுக்காக மட்டுமே நிதி ஒதுக்குவது நிதி நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது..
இந்த தேர்தல் வெறும் 1,000 ரூபாய் அல்லது 5,000 ரூபாய்க்கு வாக்களிக்கும் தேர்தலாக இருக்காது என்பதையே அன்புமணி ராமதாஸ் போன்றோர் உணர்த்துகின்றனர்..
மகளிர் உரிமைத் தொகை
கடந்த 5 வருடங்களில் தமிழக மக்கள் சந்தித்த வரிச் சுமையும் விலைவாசி உயர்வும் இந்த ரூ. 5,000 உடனடி தீர்வால் மறையாது.. தேர்தல் அறிவிப்புக்குச் சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நிதி பகிர்வுகள் மக்களின் வாக்குகளை மாற்றுமா அல்லது அரசின் மீதான கோபத்தை அதிகரிக்கும் என்பதை மே மாதம் வெளிவரும் தேர்தல் முடிவுகள் காட்டும்..
எனினும், மக்கள் இந்தத் தேர்தல் நாடகங்களை உணர்ந்து சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் பாமக உறுதியாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..












Click it and Unblock the Notifications