போலீசில் அடுத்தடுத்து குவியும் புகார்கள்.. சிக்குகிறார் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு!
சென்னை: மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசியதாக மகாவிஷ்ணு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை வரும் மகாவிஷ்ணுவை கைது செய்ய, போலீசார் சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் அண்மையில், மகாவிஷ்ணு என்ற இளைஞர் சொற்பொழிவு நடத்தியுள்ளார். தன்னை உணர்தல் என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது ஆன்மீகம், பாவ - புண்ணியம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்.

மகாவிஷ்ணு: அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் தன்னம்பிக்கை பற்றிய பேச்சு என்ற அடிப்படையில் உரை நிகழ்த்திய மகாவிஷ்ணு என்பவர் பாவ- புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை மகாவிஷ்ணு மிரட்டும் தொனியில் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது. நேற்று அசோக் நகர் பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றிருந்தார். அப்போது, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
போலீசில் புகார்: சைதாப்பேட்டை மாடல் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் கருத்துகளைப் பேசியதோடு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். அதேபோல் அசோக் நகர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக சிபிஎம் கட்சியைச் சார்ந்த வில்சன் என்பவர் புகார் அளித்தார்.
அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மகாவிஷ்ணு: மகாவிஷ்ணு நடத்தும் 'பரம்பொருள்' அறக்கட்டளை அமைந்துள்ள திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மகாவிஷ்ணு அங்கு இல்லாத நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் ஆஸ்திரேலியா சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த சூழலில் மகாவிஷ்ணு ஒரு வீடியோவை வெளியிட்டார். "நான் எங்கும் ஓடவில்லை. தலைமறைவாகவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். நாளை (இன்று) மதியம் 1 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டிற்கு வருவேன். இப்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறேன். சென்னை திரும்பியவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
குவியும் புகார்கள்: இந்நிலையில், மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசியதாக மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் திருவொற்றியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்ப்போர்ட்டில் குவிந்த போலீசார்: இந்த விவகாரத்தில் இன்று சென்னை வரும் மகாவிஷ்ணு தரும் விளக்கத்தைப் பொறுத்து அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, மிகக் கடுமையான நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை திரும்பும் மகாவிஷ்ணுவை பிடித்து அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தற்போது சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாவிஷ்ணு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications