ஆசை யாரை விட்டது... மீண்டும் ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கும் மைத்ரேயன்
சென்னை: அதிமுக சார்பில் இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் மூன்றாவது முறையாகவும் அந்த பதவியை குறிவைத்து செயல்படுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மைத்ரேயன் அங்கு தனது தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டார். மறைந்த அருண் ஜேட்லி முதல் இப்போது இருக்கும் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் மைத்ரேயனுக்கு நெருக்கமானவர்கள். இதன்மூலம் ஜெயலலிதாவுக்காக டெல்லியில் அரசியல் லாபி செய்து வந்தார் மைத்ரேயன். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் போது அவரதுக்கு ஆதரவளித்து அவர் பக்கம் நின்றார்.
தன்னை நம்பி வந்ததால் ஓ.பன்னீர்செல்வம் எப்படியும் கைவிடமாட்டார், உரிய கவுரத்தை கட்சியில் பெற்றுத்தருவார் என அவரை மலைபோல் நம்பினார் மைத்ரேயன். ஆனால் நடந்ததும், நடப்பதும் தலைகீழாகவே இருந்து வருவதால் கடும் விரக்திக்கு சென்றுள்ளார் மைத்ரேயன். கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் தலைமை வாய்ப்பு தரவில்லை. இப்போது மீண்டும் தனக்கு ராஜ்யசபா சீட் வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா.. துணை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு பேட்டி
ஆனால் இந்த முறையும் மைத்ரேயனுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு தராது எனக் கூறப்படுகிறது. அதுபற்றி விசாரித்தால், ஒருவருக்கு எத்தனை முறைதான் பதவியை திருப்பி திருப்பி தர முடியும் என்றும், கட்சியில் உள்ள மற்ற சீனியர்கள் எல்லாம் இதனால் பிரச்சனை செய்யக்கூடும் எனவும் அதிமுக தலைமை நினைப்பதாக பதில் கிடைத்தது. மேலும், மைத்ரேயன் சற்று விவரமான நபர் என்பதால் அவர் தனியாக ஒரு லாபி செய்து அது தங்களுக்கு சிக்கலை உண்டாக்கி விடக்கூடாது எனவும் கட்சி தலைமை நினைக்கிறதாம்.
இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ட்வீட்டரில் பதிவு ஒன்றை போட்ட மைத்ரேயன், காய்ச்சல் உடல்சரியில்லை என்றும் மனதும் தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அதிமுக தலைமை மீது மைத்ரேயன் அதிருப்தியில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அதேசமயம் மைத்ரேயனுக்கு பயந்தெல்லாம் இங்கு யாரும் கட்சி நடத்தவில்லை, அதனால் அவர் என்ன முடிவெடுத்தாலும் சரி என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.