பெரிய கட்சிகள் பேசிக்கிட்டு இருக்காங்க.. இப்போ ஓப்பனா சொல்ல முடியாது.. அதிமுக மாஜி சொல்லும் மேட்டர்!
சென்னை: பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்றும், பெரிய கட்சிகள் பல கூட்டணிக்கு எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றன என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், அதிமுகவும், பாஜகவும் லோக்சபா தேர்தலுக்கு தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தக் கட்சிகள் சார்பில் இன்னும் அதிமுகவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. எனினும், இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் உள்ளன. விரைவில், பாமக, தேமுதிக கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். இந்தக் குழு எந்தக் கட்சியுடனும் இன்னும் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாஜக இல்லாத மற்ற கட்சிகளை வரவேற்கிறோம். எங்களுடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் தற்போது வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் நெருக்கத்தில் அறிவிப்போம் எனத் தெரிவித்தார் ஜெயக்குமார்.
மேலும், சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேர்தல் அறிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம். நாளை வேலூர் மண்டலம், 6ஆம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம். 10 பேர் கொண்ட குழு நேரடியாக மக்களைச் சந்தித்து கருத்துக்களைப் பெறுகிறது. மக்கள் தங்கள் பரிந்துரைகளை இ-மெயில் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications