இந்தியன் ப்ரீமியர் லீக் இல்ல.. இஞ்சுரி ப்ரீமியர் லீக் தான்.. அடுத்தடுத்து விலகும் நட்சத்திர வீரர்கள்
சென்னை: ஐபிஎல் தொடரில் விளையாடவிருந்த பல்வேறு அணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகி வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள், இந்தியன் ப்ரீமியர் லீக்கா அல்லது இஞ்சுரி ப்ரீமியர் லீக்கா என்ற கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் வீட்டிற்கு சென்ற இந்திய வீரர்கள், சில நாட்கள் ஓய்வுக்கு பின் தாங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட அணிகளுடன் இணைந்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டு ஐபிஎல் தொடர், வழக்கம் போல் ஹோம் மற்றும் அவே மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒவ்வொரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்தில் நேரடியாக சென்று தங்களுக்கு பிடித்த வீரர்களை நேரில் பார்த்திட வேண்டும் என்று தயாராகி வருகின்றனர்.

வீரர்களால் கவலை
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பற்றி வரும் சில செய்திகள் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் பலரும் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருகின்றனர். அதேபோல் சில முக்கிய உள்ளூர் வீரர்களும் காயத்தால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விலகிய நட்சத்திர வீரர்கள்
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பும்ரா, ரிச்சர்ட்சன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ், சென்னை அணியின் ஜேமிசன், ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

காயமடைந்த வீரர்கள்
இந்த நிலையில் சென்னை அணியின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, லக்னோ அணியின் முக்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூரு அணியின் முக்கிய மிடில் ஆர்டர் வீரர் ரஜத் படிதர், பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அணி நிர்வாகங்கள் திணறல்
காயமடைந்துள்ள வீரர்கள் பலரும் முதல் பாதி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்றும், உள்ளூர் வீரர்களுக்கு என்சிஏ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் முக்கிய வீரர்கள் விலகி வருவதால், அவர்களை ஈடு செய்ய முடியாமல் அணி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கல் பலரும், இது இந்தியன் ப்ரீமியர் லீக்கா அல்லது இஞ்சுரி ப்ரீமியர் லீக்கா என்ற கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications