குப்பை பிரச்சினைகளுக்கு இனி 'குட்பை'.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான கலக்கல் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் பல ஆண்டுகளாகவே பெரிய பிரச்சினையாக உள்ள திடக்கழிவு மேலாண்மைக்குத் தீர்வு காணும் வகையில் சில முக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த பிப். மாதம் தான் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது.
அதன்படி தலைநகர் சென்னையில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், சென்னையின் 49ஆவது மேயராக ஆர் பிரியா பதவியேற்றார்.

சென்னை பட்ஜெட்
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக வென்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அப்போது அதிமுகவினர் பேச அனுமதி கேட்டனர். இருப்பினும் அவர்களுக்கு மேயர் பிரியா அனுமதி தரவில்லை.

அதிமுக
இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்துப் பேச அனுமதி தராததால் வெளிநடப்பு செய்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் இல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை
குறிப்பாகச் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இலவசமாகக் காலை உணவு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல ஆண்டுகளாகவே திடக்கழிவு மேலாண்மை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதற்குத் தீர்வு காணும் வகையில் சில முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இது சென்னையில் இருக்கும் கழிவு மேலாண்மை பிரச்சினைகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுசுழற்சி
மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளைப் பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுப்பனவுகளாக விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்
மேலும், சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications