சல்லி சல்லியா தகரும் "ஏக்க கனவுகள்".. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு.. ஸ்கோர் செய்கிறதா பாஜக..?
10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பினால் ஏற்பட போகும் மாற்றங்கள் என்னென்ன
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 சதவிகித இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என்றும் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை என்றும் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
முன்னதாக, அரசு தரப்பானது, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கெனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை தாண்டி வழங்கப்படுவது கிடையாது, இது தனிப்பட்ட ஒதுக்கீடு என்று விளக்கமளித்திருந்தது..
மேலும், கல்வி நிறுவனங்களில் 25% இடங்களை அதிகரிப்பதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்த நிலையில்தான், இன்றைய தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவிவேதி, ஜே.பி பார்திவாலா ஆகிய 3 பேரும் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

2 கண்டிஷன்
இந்த தீர்ப்பானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. குறிப்பாக, 2 விதமான விவாதங்கள் பொதுவெளியில் எழுகிறது.. இட ஒதுக்கீடு என்பது எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கோட்பாட்டை மீறுகிறதா? அல்லது இட ஒதுக்கீடு என்பது மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறதா? என்ற விடைதெரியாத கேள்விகளுக்கு விடைகளை காண வேண்டிய தருணம் நெருங்கி உள்ளது.

பாகுபாடு
தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீதம், மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இடஒதுக்கீடு என்பது சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை சமநிலைக்கு கொண்டுவர வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு வழங்கி மீண்டும் பாகுபாடு காட்டக் கூடாது என்ற விடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் நொறுங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

ஒடுக்குமுறை
இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டால், இன்று நாட்டில் நிலவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விஷயங்கள் மேலும் பின்னுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகலாம்.. பொருளாதாரத்தில் முன்னுக்கு செல்ல வேண்டும் என்றால், பணம் தரலாம் அல்லது கல்வி தரலாமே தவிர, பொருளாதார ரீதியிலான அளவுகளைக்கொண்டு செய்துவிடக்கூடாது.. அப்படியானால், சமூக ஒடுக்குமுறையில் இருந்து குடியரசு தலைவரே ஆனாலும், அவரால் அந்த ஒடுக்குமுறையில் இருந்து எளிதாக வெளியே வந்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

IIT மாணவர்கள்
இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், பிற சமூகத்தை சேர்ந்த திறமைசாலி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்ற ஐயம் ஏற்கனவே அழுத்தமாக நிலவி வருகிறது.. ஐஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிப்பது கிடையாது என்ற பரவலான பேச்சு உள்ள நிலையில், இந்த இடஒதுக்கீடு பிற சமுதாய மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.. முக்கியமாக, கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்க்கையின்போது, இந்த இடஒதுக்கீடும் புதிதாக மாணவர்கள் கடும் போட்டிக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

பாஜக டெக்னிக்
இனி, அத்தகைய மாணவர்களுக்கான இடவாய்ப்பும், வேலைவாய்ப்பிலும் முக்கியத்துவங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தங்கள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.. எனவே, இந்த 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கையே என்ற கருத்துக்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. இதைவிட முக்கியமாக, இந்தியாவில் முன்னேறிய வகுப்பில் எத்தனை சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர்? பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எத்தனை சதவீதம் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர்? என்கிற தரவுகள் மத்திய அரசிடம் உள்ளனவா? அந்த தரவுகள் என்னென்ன என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.

குஜராத் தேர்தல்
அதைவிட முக்கியமாக, தேர்தல் அரசியலுக்கான யுக்தியாகவே இந்த இடஒதுக்கீடு விவகாரம் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.. சமீபகாலமாகவே, பாஜக பெரும்பாலான மாநிலங்களில் சரிவை சந்தித்து வருகிறது.. பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படுகிற, உபி, குஜராத், போன்ற மாநிலங்களிலேயே தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், இடஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை அக்கட்சி கையில் எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. எந்த தேர்தல் என்றாலும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை பாஜக பெரிதாக கண்டுகொள்வதில்லை..

மண்டல் கமிஷன்
அதேசமயம், உயர் வகுப்பினரின் வாக்கு வங்கியை முழுமையாக நம்பி உள்ளது. அத்தகைய வகுப்பினரின் வாக்கு வங்கியை, சிந்தாமல் சிதறாமல் அள்ளவே இந்த 10 சதவித இடஒதுக்கீட்டை கையில் எடுக்கிறதோ என்ற இன்னொரு சந்தேகமும் பொதுமக்களிடம் கிளம்பி உள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷனுக்கு எதிராக வட மாநிலங்களில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் யார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை..
இந்தியாவில் அதிகரித்துவரும் வேலையின்மையை, இந்த இடஒதுக்கீட்டின் மூலம் மறைக்க பார்க்கிறார்களா? அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வியின் மூலம் முன்னேறி சமஉரிமை கோருவதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததன் வெளிப்பாடுதான் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு என்பதா? என்ற கோபக்கேள்வியும் வட்டமடிக்கிறது. இடஒதுக்கீடு என்பது சாதியைக் காரணம் காட்டி இத்தனை நூற்றாண்டுகளாக கல்வியும், அதிகாரமும் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல்.. விவகாரம்

வலி நிவாரணி
சாதி இருக்கும்வரை இட ஒதுக்கீடு இருக்கும் என்றுசொன்னால், சாதி இங்கு ஒருநாளும் ஒழியாது... இடஒதுக்கீட்டை பயன்படுத்தி சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை தான் நாம் கையிலெடுக்க வேண்டி உள்ளது.. இல்லாதவர்களுக்காக இயற்றப்பட்ட வலி நிவாரணிதான் இடஒதுக்கீடு.. அப்படிப்பட்ட வலி நிவாரணியே இன்று, வலியை தந்தால் எப்படி? என்ற ஆதங்க கேள்வியும் பெரும்பாலான மக்களிடம் வெடித்து கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications