சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று முக்கியமான உணவகங்கள் மூடப்படும் வாய்ப்புகள் உள்ளன. பல வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் உணவகங்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு சிலிண்டர் வராத காரணத்தால்.. பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.
சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் ஈரான் எல்லையில் வெடித்துக் கொண்டிருக்கும் போர்ச் சத்தமும், புகையும் இப்போது மெல்ல மெல்ல இந்திய இல்லத்தரசிகளின் அடுப்பங்கரை வரை ஊடுருவத் தொடங்கிவிட்டன. உலக நாடுகளின் எரிசக்திப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) முடங்கியதன் எதிரொலியாக, இந்தியாவில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கேஸ் ஏஜென்சிகளின் முன் பாம்பாக நீளும் மக்கள் வரிசை ஒருபுறம் என்றால், மறுபுறம் 'கமர்ஷியல்' சிலிண்டர் கிடைக்காமல் சென்னை முதல் கொல்கத்தா வரை ஹோட்டல் தொழில் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது.
என்னதான் நடக்கிறது?
இந்தியாவின் சமையல் எரிவாயுத் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், நாம் இறக்குமதி செய்யும் எரிவாயுவில் 85 முதல் 90 சதவீதம் வரை அந்தப் பதற்றமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வரவேண்டும். ஆண்டுக்கு 31 மில்லியன் டன் எல்.பி.ஜி-யை உறிஞ்சும் இந்தியாவிற்கு, இந்தப் போக்குவரத்துத் தடை ஒரு பெரும் இடியாக இறங்கியிருக்கிறது.
இதில் 87 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும், மீதமுள்ளவை ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. இப்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், 'வீட்டுச் சமையலை'க் காப்பாற்ற மத்திய அரசு 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை' (Essential Commodities Act) கையில் எடுத்துள்ளது. இதனால் கமர்ஷியல் சிலிண்டர் விநியோகம் கிட்டத்தட்ட முடங்கிப்போயுள்ளது.
முடங்கும் மும்பை... தவிக்கும் சென்னை!
"இன்னும் இரண்டு நாட்களில் நிலைமை சீரடையவில்லை என்றால், 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும்" என எச்சரிக்கிறது மும்பை ஹோட்டல்கள் சங்கமான 'ஆஹார்' (AHAR). ஏற்கனவே தாதர், அந்தேரி பகுதிகளில் பல உணவகங்கள் மெனு கார்டுகளைச் சுருக்கிவிட்டன.
சென்னை நிலைமையும் சற்றும் குறையவில்லை. "கமர்ஷியல் சிலிண்டர் விநியோகிப்பாளர்கள் ஸ்டாக் இல்லை என்று கைவிரித்துவிட்டனர்" என பெட்ரோலியத் துறை அமைச்சருக்குச் சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. புகழ்பெற்ற 'அன்னபூர்ணா' ஹோட்டல் தனது கிளைகளில் சில உணவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சென்னையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று முக்கியமான உணவகங்கள் மூடப்படும் வாய்ப்புகள் உள்ளன. பல வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் உணவகங்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூருவின் 'விறகு'க் காலம்!
ஐ.டி நகரமான பெங்களூருவில் பல ஹோட்டல்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே மாறிவிட்டன. பெங்களூருவின் அடையாளமான 'வித்யார்த்தி பவன்' (Vidyarthi Bhavan) உரிமையாளர் மிகுந்த வேதனையுடன் ஊடகங்களிடம் பேசுகையில், "என்னிடம் இருக்கும் ஐந்து சிலிண்டர்கள் நாளை மதியம் வரைதான் வரும். அதற்கு மேல் கேஸ் வரவில்லை என்றால் கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. எரிவாயுவைச் சேமிக்க ஏற்கனவே இரண்டு தவாக்களை அணைத்துவிட்டேன்" என்கிறார்.
அரசின் நடவடிக்கைகள் என்ன?
தட்டுப்பாடு இல்லை என்று அரசு ஒருபுறம் சொன்னாலும், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது.
விலை உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாயும், கமர்ஷியல் சிலிண்டர் விலை 114.5 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்: பதுக்கலைத் தவிர்க்க, சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் கமர்ஷியல் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் தட்டுப்பாடு நீடித்தால், உங்கள் தட்டில் இருக்கும் மசாலா தோசையின் விலை எகிறலாம் அல்லது அந்த உணவே மெனுவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications