TNEB தலைமையகத்தில் பரபரப்பு: ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்விவரங்கள் நன்கு தெரிந்த நபர்களின் சதித் திட்டமாகவே இந்தத் திருட்டு பார்க்கப்படுகிறது.

புதிதாக மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆர். நிர்மல்குமார் கடந்த மே 16-17 தேதிகளில் துறையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என கடுமையாக எச்சரித்திருந்தார். அவர் வந்து சென்ற அதே வார இறுதியில், அலுவலக ஊழியர்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இந்த துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது.

TNEB nirmal

மின்வாரியத்தின் பொருள் மேலாண்மைத் துறையில் (Material Management) உள்ள நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய டிஜிட்டல் தரவுகளே திருடர்களின் முதன்மை இலக்காக இருந்துள்ளன. காகித ஆவணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான சாஃப்ட் காப்பிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மே 30-ம் தேதி பல்வேறு பிரிவு ஊழியர்கள் தங்கள் கணினிகளில் திட்டக் கோப்புகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கணினி நெட்வொர்க் நிர்வாகிகள் மூலம் சோதனை செய்யப்பட்டபோது, 4, 5, 7 மற்றும் 10-ம் தளங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் தனியாகக் கழற்றித் திருடப்பட்டிருப்பது உறுதியானது. இதுவரை 8 ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து மட்டுமே முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பல உயர் அதிகாரிகள் இன்னும் காவல்துறைக்குச் செல்ல தயக்கம் காட்டி வருவது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும், டெண்டர் மற்றும் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் எழுத்துப்பூர்வ புகார்களை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மின்வாரிய தலைமையகத்தின் முக்கியப் பிரிவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதுதான். இடைத்தரகர்களின் நடமாட்டத்தை மறைக்கவே கேமராக்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை பலமுறை கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்தும், "செலவு அதிகம்" எனக் கூறி கட்டிடப் பிரிவு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 305-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி தலைமையிலான குழுவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்தத் திருட்டு, டான்ஜெட்கோவில் நடைபெறும் டெண்டர் முறைகேடு விவகாரங்களுக்கு மத்தியில் நடந்துள்ளது. உருமாற்றிகள் கொள்முதலில் 297 கோடி ரூபாய் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2021-2023 காலகட்ட டெண்டர்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. இந்த முக்கிய ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு மின்வாரியத்தில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்பு பலவீனங்களை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. மின்சாரத்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விசாரணை முடிவுகள் மீது பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+