சென்னையின் பிரதான சாலையில்.. இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம்! ஆபீஸ் செல்வோர் நோட் பண்ணுங்க
சென்னை: திமுக நிறுவனர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் இந்த பேரணி நடைபெறும் நிலையில், இதன் காரணமாக அங்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
திமுக நிறுவனர் அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் நினைவு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அமைதி பேரணி:
இந்த பேரணியில் திமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமைதி பேரணி நடைபெறும் அண்ணா சலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த பேரணியைக் கருத்தில் கொண்டு அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
டிராபி்க் போலீஸ்:
எந்தெந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.. மக்கள் எந்த சாலையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த மேஜர் அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாகச் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காலை 08.00 மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள்.
போக்குவரத்து மாற்றம்:
இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. போர் நினைவுச் சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
2. கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதா கிருஷ்ணன் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
3. பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை X திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாகச் செல்லலாம்.
4. மவுன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கித் திருப்பி விடப்படும்.
நோட் பண்ணுங்க:
அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது
திங்கள்கிழமையான இன்று காலை பொதுமக்கள் பலரும் ஆபீஸ் செல்ல வேண்டி இருக்கும் என்பதால் இந்த போக்குவரத்து மாற்றம் குறித்துத் தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் லஞ்ச் முடியும் வரை டிராபிக்கிலேயே சிக்கும் சூழல் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications