'எங்களுடன் வாருங்கள்'... மநீம பகிரங்க அழைப்பு - மனம் மாறுமா காங்கிரஸ்?
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது. விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டாலும், 'பாஜக எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில் வேறு வழியின்றி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நேற்று, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுக நம்மை சுத்தமாக மதிக்கவில்லை என்று கூறி கண்ணீர் விட்டே அழுதுவிட்டார். அது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு 'கண்கள் இருந்தால் கண்ணீர் வரத் தான் செய்யும்' என்று பூசி மொழுவினார்.
பேச்சுவார்த்தை தொடங்கிய போது, காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் வரை கேட்கப்பட்டது. பிறகு 30 தொகுதிகள் வரை அவர்கள் இறங்கி வந்தனர். அதேசமயம், பிகே ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கிய திமுகவோ, 15-ல் தொடங்கி, 18 தொகுதிகள் வரை வந்துள்ளது.
இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் அணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், 'மக்கள் மாறுதலுக்கு தயாராகிவிட்டனர். காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்தால் வந்தால் அவர்களுக்கு நல்லது. ஆனால், எங்களுடன் வருகிறார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை இப்போது கூறமுடியாது' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸை தங்கள் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் அழைத்திருந்த நிலையில், திமுக தரப்புடன் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருவதால், மீண்டும் நேரடியாக அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.