மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த பெரிய ‘விக்கெட்’.. அரசியலுக்கு முழுக்கு போட்ட பொன்னுசாமி! என்னாச்சு?
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி திடீரென விலகியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் பொன்னுசாமி கட்சியில் இருந்து விலகுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொழிலாளர் அணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சு.ஆ.பொன்னுசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் இருந்து பலர் வெளியேறியபோதும் உடன் இருந்த பொன்னுசாமி, தற்போது "அரசியல் எனக்கு ஒத்துவராது" எனக் கூறி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனது செயல்பாடுகளை பார்த்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் செயல்வீரனாக, எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நான் செயல்பட்டு வந்ததை அனைவரும் நன்கறிவீர்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொறுப்பில் இணைந்த போதே என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபர்கள், "உனக்கு அரசியல் ஒத்துவராது" என எச்சரிக்கை செய்த போதும், அதை புறம் தள்ளி எனது பயணத்தை தொடர்ந்தேன். ஆனால், கடந்த 4 5 மாத அரசியல் பயணத்தில் நண்பர்கள் கூறியது முற்றிலும் சரி என்பதை உணர்ந்துகொண்டேன்.
அரசியல் எனக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து, தவிர்க்க முடியாத காரணத்தால் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்குகிறேன். இந்த தருணத்தில் என் மீது நம்பிக்கை வைத்து முக்கிய பொறுப்பை வழங்கி, பொருளாதார பின்புலம் இல்லாத சாமானியனான என் மீது நம்பிக்கை வைத்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், என்னை ஊக்குவித்து வந்த துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா மற்றும் கட்சியின் ஏனைய நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், மய்ய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொறுப்பில் இருந்தபடியே, பொன்னுசாமி தமிழ்நாடு பால் முகவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இனி முழு நேரமாக பால் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் பொன்னுச்சாமி.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டாக்டர் மகேந்திரன், சி.கே.குமரவேல், பத்மபிரியா, முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பழ.கருப்பையா, ரம்யா வேணுகோபால் எனக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது மாநில நிர்வாகி சு.ஆ பொன்னுசாமியும் கட்சியை விட்டு விலகியிருப்பது ம.நீ.மவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் (மய்யத்தில்) இருந்து விடை பெறுகிறேன்.
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) August 12, 2023
-. pic.twitter.com/nAbDcPLYld












Click it and Unblock the Notifications