2024 நாடாளுமன்றத் தேர்தல்.. திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி? கமல்ஹாசன் சொன்ன அந்த பதில்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மீது பல்வேறு தரப்பில் இருந்தும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்போது வைக்கப்பட்ட விமர்சனங்களில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாக வைத்த விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவினர் உடனான கமல்ஹாசனின் மோதல், அவரது அரசியல் வருகையையும் உறுதிபடுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை முன்னிலைப்படுத்தினார்.
அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக அரசு.. கடலூரில் பட்டியலிட்ட ஈபிஎஸ்..முதல்வர் ஸ்டாலின் மீது அட்டாக்
தொடர்ந்து தோல்வி
தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எந்த தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. இருந்தும் பல்வேறு தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்ததால், சட்டமன்றத் தேர்தலில் ஆர்வமாக அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த முறை நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக தேர்தல் களமிறங்கினார்.
சினிமாவில் மீண்டும் ஆர்வம்
ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. இதனால் அக்கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் பதவியில் இருந்து விலகியதோடு, மாற்றுக் கட்சிக்கும் தாவினர். இதனால் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
அறிக்கையும், அரசியலும்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டே, விக்ரம், இந்தியா - 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடங்கினார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கள அரசியலில் ஈடுபடவில்லை. வெறும் அறிக்கைகள், ட்விட்டர் மூலமாக மட்டுமே மக்கள் நீதி மய்யம் அரசியலில் இருந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளை தூசிதட்ட கமல்ஹாசன் முடிவு செய்தார்.
நிர்வாகிகள் ஆலோசனை
இதற்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அந்த கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முடிவு செய்தார். அதன்படி இன்று தனியார் ஓட்டலில் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
கமல்ஹாசன் பேட்டி
இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றிய விவாதிக்கப்பட்டது. அதேபொல் கட்சி நிர்வாகிகளுக்காக பயிற்சி பட்டறையும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் கூறுகையில், தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம். அதேபோல் கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
திமுக - மநீக
அண்மைக் காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளதார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே தற்போது பாஜக உடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனால் ஐஜேகே-வுக்கு பதிலாக மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.