சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல.. தனியாரிடம் ஒப்படையுங்கள்.. கொதிக்கும் கமல்ஹாசன்!
சென்னை: சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறுகையில், பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.
குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.