யார் ஆட்சி செய்தாலும் இதே நிலை.. இப்போ புரிகிறதா கமல் கட்சி ஆரம்பித்த நோக்கம்? முரளி அப்பாஸ் கேள்வி
சென்னை:நேர்மையான அரசு இருந்தால், இரு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக வெள்ளையறிக்கை தெரிவித்தது. இந்த நிலையில்தான் ம.நீ.ம இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முரளி அப்பாஸ் வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள் இவைதான்

93 சதவீத மக்கள்
ஆளும் அரசுகளுக்கெதிராக, நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்கு குரல்கொடுக்கும் அறப்போர் இயக்கம், அண்மையில் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் ஆற்ற வேண்டியுள்ளது என்று 93 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் உணர்ந்து உள்ளார்கள்
யார் ஆட்சி செய்தாலும் இந்த அரசு லஞ்சப்புற்றாகவே இருக்கிறது என்ற உண்மையை இந்த அறிக்கை நமக்கு சொல்கிறது. அதிலும் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால் இதை மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள் என்பதுதான்.

கமல்ஹாசன் நேர்மை
இதனை காணும்போது, எங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். கமல் ஹாசன், ஏன் நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தி இந்த கட்சியை ஆரம்பித்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

அரசு கட்டுமானங்கள் இடிந்து விழுகின்றன
மக்கள் வரிப்பணம் பாழாவது, அத்தியாவசிய பொருட்களின் விலையேறுவது , பொது நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது, அரசின் கட்டுமானங்கள் அற்பாயுளில் இடிந்து விழுவது இவையெல்லாமே லஞ்சம் என்ற அரக்கனின் கோரவிளையாட்டுக்களே.

இரு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம்
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் தலைவர் பேசும்போது, மக்களைப்பார்த்து, நீங்கள் நேர்மையான அரசு அமைக்க வாய்ப்புக்கொடுங்கள், அந்த அரசால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று கூறினார். வந்த முடிவுகள் வேறானாலும், இந்த அரசில் புரையோடிப்போயிருக்கும் ஊழலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறப்போர் இயக்கம் மூலம் அறியும் போது, காலம் மாறும் மக்கள் மனதும் மாறும் என்பதை உணரமுடிகிறது.

எழுச்சியுடன் செயல்படும் ம.நீ.ம
சீரழிந்து கிடக்கும் நிர்வாகத்தை மக்களின் வாக்குதான் மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து, வருங்காலங்களில் அதற்கான நடவடிக்கைகளில் மக்கள் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் நீதி மய்யத்திற்கு உண்டு என்பதால் அது தன் பாதையில் தொடர்ந்து எழுச்சியுடன் செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications