Mallai Sathya: கருப்பு - சிவப்பு, 7 நட்சத்திரங்களுடன் புதிய கொடி.. கட்சியா? அமைப்பா? சஸ்பென்ஸ் வைத்த மல்லை சத்யா
சென்னை: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் 7 நட்சத்திரங்களுடன் கூடிய புது கொடியை அறிமுகம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் கொடியை அறிமுகம் செய்த மல்லை சத்யா புதிய கட்சியா அல்லது அமைப்பா என்பதை மட்டும் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். மதிமுகவில் இருந்து கடந்த வாரம் வைகோவால் மல்லை சத்யா நீக்கப்பட்ட நிலையில் புது கொடியை அறிமுகம் செய்துள்ளார்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். மதிமுகவில் இருந்து ஏற்கனவே விலகிய முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், பொடா அழகுசுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலையில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பிறந்த நாளான இன்று தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார் மல்லை சத்யா.

கருப்பு சிவப்பு நிறத்தில் கொடி
இன்று அறிமுகம் செய்யப்பட்ட கொடியில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் 7 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மல்லை சத்யா தொடங்க இருக்கும் புதிய கட்சி அல்லது அமைப்பின் பெயர் வரும் நவம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவு சின்னத்தில் "திராவிட குடியரசு விடுதலை கழகம்" என்ற பெயர் இருந்ததால், அதுவே கட்சி பெயராக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிமுகவில் இருந்து ஏற்கனவே விலகிய தலைவர்கள் ஒரே மேடையில் ஏறி புதிய கொடியை அறிமுகம் செய்து இருப்பதன் மூலம், புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மல்லை சத்யா நீக்கம் ஏன்?
மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. வைகோவிற்கு அடுத்தபடியாக கட்சியில் முக்கிய பிரமுகராக அறியப்பட்ட மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கிய பதவிக்கு வந்ததிலிருந்து, வாரிசு அரசியல் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
வாரிசு அரசியலுக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கிய வைகோ, தற்போது தனது மகனை முன்னிறுத்துவதாகவும், முக்கிய பதவி வழங்குவதாகவும், மல்லை சத்யா நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு
ஒரு கட்டத்தில் இந்த மோதல் போக்கு அதிகரிக்க, மல்லை சத்யா மீது வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை வைகோ முன்வைத்தார். அதாவது, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தற்போது தனக்கு துரோகம் செய்துவிட்டதாக வைகோ தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்குமான மோதல் அதிகரித்து, மல்லை சத்யா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, உட்கட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்லை சத்யா உண்ணாவிரதம் இருந்தார்.
இதையடுத்து, 15 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என வைகோ கடிதம் எழுதியபோது, மல்லை சத்யா பதில் அளிக்கவில்லை. இதனால், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான உத்தரவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications