ஆளுநர்களுக்கு செக்.. முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டென போன் போட்ட மம்தா பானர்ஜி.. ஆதரவோடு ஐடியா வேற!
சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி முக்கிய ஐடியா ஒன்றையும் கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக இன்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்-அமைச்சர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே சமூகமான உறவு இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சூழல் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா, டெல்லியில் தான் ஆளும் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிப்பது இல்லை. மாறாக மசோதாக்களை நீண்டநாட்களாக கிடப்பில் போடுகிறார். இதனால் மக்களுக்காக அரசு கொண்டு வரும் நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது என ஆளும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தனித்தீர்மானம் என்பது சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தும் வகையில் உள்ளது.
மேலும் இந்த தனித்தீர்மானத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில் தனித்தீர்மானம் பற்றியும், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஆதரவு குவிந்து வருகிறது. முதல் முதலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பாராட்டினார். அதன் பிறகு கேரளா முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்த வரிசையில் தற்போது 3வது நபராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணைந்துள்ளார். அதாவது இன்று மம்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி இன்று தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.
இதையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்துக்கு அவர் வரவேற்பு தெரிவித்து ஆதரவு வழங்கினார். மேலும் ஆளுநர்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
மாநில ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிற மாநில முதல்வர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த ஐடியாவை கொடுத்துள்ளார். இதனால் இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
****












Click it and Unblock the Notifications