சென்னை தி.நகர் ஆகாய நடைபாதையில் தினசரி பயணிப்பவரா? சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை : மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து, தி.நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆகாய மார்க்கமாக மாம்பலம் ரயில் நிலையம் வரை 28 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் 570 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் துவக்கி வைத்தார்.

இந்த ஆகாய நடைபாதையில் நகரும் படிக்கட்டுகள், மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரங்கநாதன் தெருவிலும், தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் உஸ்மான் சாலை என இரண்டு இடத்திலும் தலா ஒரு மின் தூக்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை நகரும் படிகட்டுகள் (ம) மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 16.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவற்றில் நகரும் படிகட்டுகள் (ம) மின்தூக்கிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, 13.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நகரும் படிகட்டுகள், 14.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தெற்கு உஸ்மான் சாலை மின்தூக்கி மற்றும் 14.06.2023 அன்று மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை மார்க்கெட் சாலை இரயில் நிலைய மின்தூக்கி ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் ஆகாய நடைபாதை மூடப்பட்டிருக்கும் எனவும், இப்பணி நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் வழக்கம் போல் படிக்கட்டுகளையும், நகரும் படிக்கட்டுகள் மூடப்பட்டிருப்பின் மின்தூக்கியையும், மின்தூக்கி மூடப்பட்டிருப்பின் நகரும் படிக்கட்டுகளையும் பயன்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications