வேளச்சேரி ரயில் நிலையத்தை அலற விட்ட நபர் கைது.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்? ஷாக் தகவல்!
சென்னை: சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அது புரளி என தெரியவந்தது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் மூலமாக வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நள்ளிரவில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார், வேளச்சேரி காவல் நிலைய போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
மோப்ப நாய் பிரிவு போலீசார் மோப்ப நாய் லிசியுடன் ரயில் நிலைய பகுதி முழுவதும் 2 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். ஆனால் வேளச்சேரி ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. அப்போது தான் அது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பற்றி வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜோதிவேல் (வயது 62) என்பவர் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. ஜோதிவேல், அரியலூர் மாவட்டம் திருமேல்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், மது போதையில் அவர் வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதிவேல் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தான் இவ்வாறு செய்துவிட்டதாகவும் போலீசாரிடம் கூறியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications