வீட்டிலிருந்த நகை திடீர் மாயம்.. மொத்தம் 550 சவரன்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!பரபர பூந்தமல்லி
சென்னை : சென்னையை அடுத்த பூந்தமல்லியில், சொந்த வீட்டிலேயே மனைவி மற்றும் தாயின் நகைகள் என 550 சவரன் நகையை திருடியவர், இளம்பெண்ணுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த சேகர் என்பவர், தனது சகோதரர் ராஜேஷ் மற்றும் தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். திருமணமான சகோதரர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
பீரோவில் இருந்த நகைகள் மாயம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சேகரின் மனைவி திரும்பி வந்து, கணவர் வீட்டில் தனது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்தபோது அது மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், ராஜேஷ் மனைவியின் நகை மற்றும் தாயார் தமிழ்ச்செல்வியின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
சொந்த வீட்டிலேயே திருடிய அண்ணன்
நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, சேகரின் மனைவி உட்பட அனைவரும் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், அண்ணன் சேகர், தனது வீட்டில் இருந்த 550 சவரன் நகைகளை திருடி, அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது அம்பலமானது.
போலீசாரின் அதிர்ச்சி தகவல்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் அவரது தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நகையை திருடியவர் இளம்பெண்ணுடன் கைது
போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர், தனது தோழியிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், 550 நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சொந்த வீட்டிலேயே மனைவியின் நகையை மட்டுமின்றி தம்பியின் மனைவி, தாயின் நகைகள் என 550 சவரன் நகையை திருடிச் சென்று, காதல் தோழியிடம் கொடுத்தவர், இளம்பெண்ணுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.