போலி பணி நியமன ஆணை.. 7 வருடங்களாக பலே மோசடி.. சென்னை தலைமைச் செயலகம் அருகே சிக்கிய நபர்
சென்னை: சென்னை, தலைமைச் செயலகம் அருகே போலி அரசு பணி நியமன ஆணைகளுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாண்டுகளாக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் குமார் (40). அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் (50) சில மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதுதொடர்பாக குமார் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அதன்பேரில் தலைமைச் செயலகத்தின் எதிரே பொதுப்பணித்துறை இடத்தில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமாரை கோட்டை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு துறைகள் மற்றும் அரசு பள்ளிகளில் வேலை வாங்கித்தருவதாக பலரை மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்த 6 போலி பணி நியமன ஆணைகளையும், 55 ஆயிரம் ரொக்கம் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவருடைய பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications