கணவன் போல பழகினான்... எமனாக மாறி எரித்தான்- சென்னை கொரட்டூரில் பயங்கரம்
வீட்டு செலவுக்கும் வாடகைக்கும் பணம் கேட்ட பெண்ணை எரித்து கொன்றுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர். கணவன் போல பழகி வாழ்ந்த நபரே எமனாக மாறி கொன்று விட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறான்.
சென்னை: செலவுக்கு பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளார் ஒரு நபர், சாவதற்கு முன்பாக அந்தப் பெண் மரண வாக்குமூலம் அளிக்கவே, கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணவன் போல பழகி வாழ்ந்த நபரே எமனாக மாறி கொன்றுள்ளான். சென்னை கொரட்டூரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் தேவி என்பதாகும். கொரட்டூரில் உள்ள பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த சங்கர் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நடந்த கலவரத்தில் அவர் இறந்து போகவே குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் தேவி.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி செய்து வந்த தேவிக்கு வேப்பேரியைச் சேர்ந்த தங்கராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் தேவியை உடலில் எரிந்த நிலையில் மீட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். தனது மரணத்திற்குக் காரணம் தங்கராஜ்தான் என்று தேவி வாக்குமூலம் கொடுத்து விட்டு உயிரிழந்து விட்டார். தேவியை தங்கராஜ் கொல்ல காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமான நபருடன் தொடர்பு
கடந்த ஆறு ஆண்டுகாலமாக தேவியும், தங்கராஜூம் கணவன் மனைவி போலவே வாழ ஆரம்பித்தனர். தங்கராஜூக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இருந்தாலும் தேவி உடனான தொடர்பையும் விடவில்லை. தேவியின் இரண்டு மகள்களும், தங்கராஜின் மகன்களும் ஒரே வீட்டிலேயே இருந்துள்ளனர்.

வாடகை வீடு
கொரட்டூரில் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் செலவுகளை தேவி மட்டுமே பார்த்து வந்துள்ளார். தங்கராஜ் வீட்டிற்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் தினசரியும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதகாலமாக வீட்டு வாடகைப்பணம் தரவில்லை. வீட்டுக்காரர் வீட்டை காலி செய்யச் சொல்லி சத்தம் போட்டுள்ளார். அந்த கோபம் மொத்தமும் தங்கராஜ் மீதே திரும்பியது.

அடிதடி தகராறு
குடித்து விட்டு வழக்கம் போல வீட்டிற்கு வந்த தங்கராஜிடம் வாடகைப் பணம் கேட்டார் தேவி. அதற்கு தங்கராஜ் தர மறுத்துள்ளார். காசு தராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தேவி மிரட்டியுள்ளார். நீயாக சாக வேண்டாம் நானே எரித்து விடுகிறேன் என்று கூறி மண்ணெண்ணெயை மேலே ஊற்றி பற்ற வைத்து விட்டு ஓடிவிட்டார். தேவியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்து விட்டார்.

அவனை விடாதீர்கள்
மரணத்திற்கு முன்பாக போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், தினசரியும் எங்களுக்குள் தகராறு நடக்கும். நேற்றும் சண்டை போட்டோம். அவனை மிரட்டுவதற்காக கையில் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தேன். அதனை என்னிடம் இருந்து பறித்து மேலே ஊற்றி பற்ற வைத்து விட்டான். அவனை விடாதீர்கள் என்று கூறி விட்டு உயிரிழந்து விட்டார்.

கொலையாளி கைது
தேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில், தேவியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் சண்டை போட்டேன். தீக்குளிப்பதாக கூறினாள். நானே எரித்து விட்டேன் என்று கூலாக வாக்குமூலம் அளித்திருக்கிறான். தங்கராஜை இப்போது சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications