நாய் குறைத்ததால் ரத்தக்களரியான வடசென்னை... 3 பேருக்கு கத்திக்குத்து
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அருகே தன்னை பார்த்து நாய் குறைத்ததால் அதன் உரிமையாளரையும் அவரது 2 மகன்களையும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் தனசேகர் என்பவர் தன்னை பார்த்து ராஜலட்சுமியின் வளர்ப்பு நாய் எப்பொழுதும் குறைத்துக்கொண்டே இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பல முறை சொல்லியும் கேட்காததால் வளர்ப்பு நாயை தனசேகர் திடீரென தாக்கியுள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் மகன் திவாகர் மற்றும் ரித்தீஷ் ஆகியோர் தனசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற தனசேகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜலட்சுமி மற்றும் அவரது மகன் திவாகர், ரித்தீஸ் ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளார்.
காயமடைந்த திவாகரும் ரித்தீஸும் தனசேகரின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது மனைவி திவ்யபாரதியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியால் வெட்டு பட்ட ராஜலட்சுமி மற்றும் அவரது மகன்கள் திவாகர், ரித்தீஸ் ஆகியோர் ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திவாகர், ரித்தீசால் தாக்கப்பட்ட தனசேகரும் அவரது மனைவி திவ்யபாரதியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
வீட்டு வளர்ப்பு நாய் குறைத்ததால் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தின் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications