செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில்.. மதுபோதையில் இளைஞர் செய்த பகீர் செயல்.. மிரண்டு போன பொதுமக்கள்
செங்கல்பட்டு: பாலாற்றின் பாலத்தின் அடியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் சிக்கிக் கொண்டார். சுமார் 3 நாட்களுக்கு அங்கேயே சிக்கியிருந்த அந்த நபரைத் தீவிர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகச் சென்னை, செங்கல்பட்டு உட்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மூன்று நாட்களாகப் பாலாற்றுப் பாலத்தின் அடியில் சிக்கிய நபரைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.

சென்னை கனமழை
பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாகச் செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் சுமார் 13 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலாற்றுப் பாலத்தின் அடியில் ஒருவர் சிக்கியுள்ளதைக் கண்டனர். பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

பாலாறு வெள்ளம்
இருப்பினும் பாலாற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால் பொதுமக்களால் அவரை பத்திரமாக மேலே தூக்க முடியவில்லை. இதையடுத்து உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர். முதல்கட்ட விசாரணையில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பதும் மதுபோதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் தெரியவந்தது.

மதுபோதை
இந்நிலையில் பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது தெரியவந்தது. கரிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலாற்று அடிப் பாலத்திற்குச் சென்று மது அருந்தியுள்ளார். போதையில் அங்கேயே படுத்துத் தூங்கிய அவர், கண் விழித்துப் பார்த்தபோது இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.

3 நாட்களாகச் சிக்கித் தவிப்பு
பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் நீரால் அவரால் அங்கிருந்து நகர முடியவில்லை. பாலத்தின் அடியில் பாதுகாப்பாக நின்று கொண்டு அந்த வழியாகச் சென்றவரிடம் உதவி கேட்டுள்ளார். இருப்பினும், வெள்ளநீர் கரைபுரண்டு சென்று கொண்டிருந்ததால் இவர் கத்துவது யாருடைய காதிலும் விழவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாகவே அவர் பாலாறு அடிப் பாலத்தில் சிக்கியுள்ளார். 3 நாட்களுக்குப் பின்னரே அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications