நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் கனமழை இருக்கும்! காற்றின் வேகம் எப்படி? பாலசந்திரன் தகவல்
சென்னை: மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் இப்போது நிலைகொண்டுள்ளது. அதாவது மாமல்லபுரத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் இப்போது நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

13ஆவது புயல்
மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னைக்கும் புதுவைக்கும் இடையே 1891 முதல் 221 வரை 12 புயல்கள் கடந்துள்ளன என்று குறிப்பிட்ட பாலசந்திரன், இப்போது கடக்கும் மாண்டஸ் புயல் சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கடக்கும் 13ஆவது புயலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிர கனமழை
மேலும், இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மாண்டஸ் புயல் காரணமாக இப்போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீட்டராக உள்ளது என்று தெரிவித்த அவர் புயல் காரணமாகக் கடலோர பகுதிகளில் கனமழை முதல் தீவிர கனமழை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் தெரிவித்தார்.

நாளை அதிகாலை
புயல் நகரும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது இன்று இரவு முதல் நாளை காலைக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று கூறிய அவர், புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு முடிவடைய நாளை அதிகாலை வரை ஆகும் என்றும் தமிழக அரசுக்கு மழை தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அளித்து வருவதாகவும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பூங்கா
மாண்டஸ் புயல் காரணமாகச் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தால் அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேருந்து சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications