எடப்பாடிக்கு ‘ஷாக்’ கொடுத்த தமிமுன் அன்சாரி.. “போர்க் கப்பலில் பயணம்”.. திமுக கூட்டணிக்கு மஜக ஆதரவு!
சென்னை: மனிதநேய ஜனநாயகக் கட்சி, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக மற்றும் அதிமுக தங்களது கூட்டணிகளை இதுவரை இறுதி செய்யாத நிலையில், தொகுதி பங்கீட்டையே இறுதி செய்து முதல் அணியாக களத்தில் குதித்துள்ளது திமுக. காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் இந்த இந்த தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது திமுக.

இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவர் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிமுன் அன்சாரி, "நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம். முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்.
இந்த மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை, ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்க்கிறேன். அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிமுகவுக்கு நாங்கள் ஆதரவு என வரும் தகவல் தவறானது.
இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், ஃபாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் முதன்மையான நோக்கம் ஜனநாயகத்தை பாதுகாப்பது தான். கடல் கொள்ளையர்களை வீழ்த்த வேண்டும். தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணம் செய்வதா? போர்க் கப்பலில் பயணம் செய்வதா? என்று யோசிக்க வேண்டும். போர்க்கப்பலில் பயணம் செய்தால் தான் கடல் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்.
தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம். வரும் லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிகாக 40 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றுவோம்." எனத் தெரிவித்தார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்று சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த தமிமுன் அன்சாரி, திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கும் சீட் ஒதுக்கப்படாது எனத் தெரிகிறது. எனினும், திமுகவுக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் முடிவை எடுத்துள்ளார் தமிமுன் அன்சாரி.












Click it and Unblock the Notifications