Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியின் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவிடம், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அனைத்திற்கும் நிதானமாக, தெளிவாக தனது அமைதியான பாணியில் பதிலளித்தார்.

Recommended Video

    சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பிரத்யேகப் பேட்டி

    எப்படி இருக்கிறீர்கள்... உடல்நலம் எப்படி உள்ளது?

    திடகாத்திரமாக உள்ளேன். எந்த பிரச்சனையும் இல்லை. சீரிய முறையில் என்னுடைய கட்சிப் பணிகளையும், சமுதாய பணிகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன்.

     Manithaneya Makkal Katchi chief jawahirullah interview tn assembly elections 2021

    உங்களுடைய தேர்தல் பணிகள் குறித்து சொல்லுங்க..

    2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு முழுமையான தயார் நிலையில் இருக்கின்றோம், கொரோனா காலக்கட்டத்திலும் கூட தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டோம். வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து வகை தேர்தல் பணிகளையும் முடித்து தயாராக உள்ளோம்.

    ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி குறித்த உங்கள் பார்வை என்ன?

    வட இந்தியாவில் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களின் மக்கள் தொகை மிகக் கணிசமாக இருக்கின்றது. பீகாரில் ஏறத்தாழ 24 விழுக்காடு முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். உ.பி.யில் 20 விழுக்காடு முஸ்லீம்கள் உள்ளனர். மேற்குவங்கத்தில் இதைவிட அதிகமாக முஸ்லீம்கள் உள்ளனர். அந்த மாநிலங்களில் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மை மக்கள் அவ்வளவு அடர்த்தியாக வாழ்ந்தாலும் கூட, அவர்களுடைய பிரச்சனைகள் சரியான முறையில் அரசியல் களத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதை மையமாக வைத்து தான், ஓவைஸி அந்தந்த மாநிலங்களில் அவரது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 5 எம்.எல்.ஏ.க்களும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

    ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு 1967 முதல் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காங்கிரஸ் ஆண்டது. இந்த ஆட்சிகளின் போது சிறுபான்மை மக்களுடைய பல்வேறு கோரிக்கைகள், அதாவது அரசியல் ரீதியாக முஸ்லீம் அரசியல் கட்சிகளால் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு இருக்கின்றது. இப்படியான ஒரு நிலையில், இங்கு தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்க கூடிய வகையில், சிறுபான்மை மக்களுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்காக வேண்டி குரல் கொடுக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லீம் கட்சிகள் வலுவாக இருக்கக் கூடிய ஒரு நிலையில், ஓவைசியின் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு தேவை இல்லை என்பதே என்னுடைய கருத்து.

    எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்?

    இங்கிருக்கக் கூடிய அதிமுக, அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை சார்ந்து இருக்கக்கூடிய ஒரு சூழலில், தமிழ்நாட்டின் பல்வேறு உரிமைகளை நாம் பறிகொடுத்திருக்கின்றோம். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க இயலாத ஒரு நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி செயல்பட்டு வந்தது. நீட் எங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று சொன்னால், நீட் இங்கே திணிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமை அதிமுக ஆட்சியில் பாஜகவால் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டது, அதற்கு அதிமுக எப்படி இசைந்து போனது என்பதையெல்லாம் மக்கள் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம். தமிழ்நாடு அரசாங்கம் உருவாக்கிய தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்எஸ்.சி. பயோ டெக்னாலஜி (உயிர் தொழில்நுட்பவியல் படிப்பு).. அதில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க மாட்டோம் என்று சொல்லி, இந்த கல்வியாண்டில் அந்த படிப்பில், அந்த பாடத்தில் யாருமே சேர முடியாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

    இவையெல்லாம் மிகத் தெளிவாக, மாநிலங்கள் உரிமை பறிக்கப்படக் கூடிய இந்த சூழலை மக்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். பாஜக ஆதரவுடன் அதிமுக வெற்றிப் பெற்றுவிட்டால் சமூக நல்லிணக்கத்துக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கப்படும் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்வோம்.

    பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவரும் சமூக நீதி, மாநிலங்களின் உரிமை போன்றவற்றில் எந்தவிதமான சமரசத்துக்கும் செல்லவில்லை. ஆனால், இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக, அத்தனையையும் மத்திய அரசாங்கத்திடம் அடகு வைத்துவிட்ட இந்த அவலங்களையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி, பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிக்கும் வகையில் எங்களுடைய பரப்புரை இருக்கும்.

    உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்திக்கிறதா?

    திமுக அதுபோன்ற எந்தவித நிர்பந்தமும் செய்யவில்லை. மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்தவரைக்கும், 2009ல் முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தோம். அதன்பிறகு, தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றில் எங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிட்டோம்.

    தமிழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் உங்கள் மதிப்பெண் என்ன?

    அதிமுக அரசு தேர்ச்சியே பெறவில்லை. ஃபெயில் மார்க் தான். ஒரு 30 மதிப்பெண் கொடுக்கலாம். ஆனால், திமுக சிறப்பான முறையிலே தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு 75 மதிப்பெண் கொடுப்பேன்.

    உங்களுடன் கரம் கோர்க்க தயார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஒன் இந்தியா தமிழிடம் கூறியிருக்கிறார். இதைப் பற்றிய உங்கள் கருத்து?

    தமிழக நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகம் காக்கப்பட வேண்டும் என்ற அந்த கருத்தில் ஒத்திசைவாக இருக்கக் கூடிய எல்லோருடனும் கைக்கோர்க்க தயாராகவே இருக்கின்றோம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+