காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழக மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்யும் செயல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய ஆணையம் தன்னிச்சை அமைப்பாக செயல்பட தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம்... விருப்பமே இல்லாமல் ஒப்புதல் தந்த முதல்வர்
பாஜக அரசு
தமிழ்நாடு - கர்நாடகத்திற்கு இடையே உள்ள காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. .. காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தனித் தலைவரை நியமிக்க வேண்டிய தமிழக எதிர்க் கட்சிகள் கோரிவந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமித்து தனது பாரபட்சத்தை வெளிப்படுத்தியது பாஜக அரசு.
பச்சைத்துரோகம்
இந்நிலையில் தன்னிச்சையான அமைப்பு என அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பச்சை துரோகமாகும். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய பாஜக அரசு காவேரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் வளத்துறையுடன் இணைத்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
பேரதிர்ச்சி
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலாகும். மத்திய பாஜகஅரசின் இந்த நடவடிக்கையால் அதிகாரமற்ற அமைப்பாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மாறி, அதன் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்கு இந்த முடிவு வழிவகுக்கும். கொரோனா நோய் தொற்று பிரச்சினையில் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டிய மத்திய அரசு அவர்களுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.
அரசுக்கு கோரிக்கை
எனவே மத்திய அரசு நீர் வளத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்து, முன்பை போல் தன்னிச்சை அமைப்பாக அது செயல்பட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் தர முன் வர வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.