"வந்தாச்சு.. மஞ்சப்பை கொடுக்கும் மெஷின்..” காசு போட்டா பை வரும் - பொது இடங்களில் அமைக்க திட்டம்!
சென்னை: பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயம் போட்டால் மஞ்சப்பை வெளிவரும் இயந்திரத்தை பொது இடங்களில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சப்பை திட்டம்
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் துவக்க விழாவிலேயே, மஞ்சள் பையை அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழிப்புணர்வு
மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டன. மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பணிகளில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானே மஞ்சப்பைகளை பயன்படுத்தி வருகிறார்.

மஞ்சப்பை பேக்
சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ், தான் எங்கு சென்றாலும் மஞ்சப்பைகளையே பயன்படுத்தி வருகிறார். அலுவலகம் செல்லும்போதும், அரசின் கூட்டங்களுக்குச் செல்லும்போதும் மட்டுமல்லாமல் விமான நிலையம் செல்லும்போது கூட அவர் மஞ்சப்பை விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ள துணி பேக்கையே எடுத்துச் செல்கிறார். இதுதொடர்பாக அவ்வப்போது அவர் ட்விட்டரில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்
இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், ஒரு இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயத்தை உள்ளே போட்டதும், மஞ்சப்பை ஒன்று வெளியே வருகிறது.

விரைவில்
மேலும், ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுப்ரியா சாஹூ, மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வந்துவிட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணிப்பைகளை பயன்பாட்டுக்கு வைப்பது சவாலான பணியாக உள்ளது. சந்தைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றில் இந்த இயந்திரங்களை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் முழுமையான தகவல்கள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications