முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!
சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், திமுக அதிமுக ஆகிய கட்சிகளிடம் சீட் பெற முயற்சித்தார். 2 கட்சிகளுமே கண்டு கொள்ளாததால், 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். திருச்சி லால்குடியில் தான் போட்டியிடப் போவதாகவும் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் தலைமையிலான தவெகவிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான் திமுகவிடம் சீட் வாங்க முயற்சி செய்தார். தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன் எனக் கூறி வந்தார் மன்சூர் அலிகான். ஆனால், திமுக அவருக்கு சீட் தர முன்வரவில்லை.
இதையடுத்து, அதிமுக கூட்டணியில் ஒரு சீட் வாங்க முயற்சி மேற்கொண்டார். அண்மையில் பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு பாட்டுப் பாடியபடியே சென்றிருந்தார் மன்சூர் அலிகான். அதிமுக தலைமையும் அவருக்கு சீட் தரவில்லை. திமுக, அதிமுக கட்சிகள் தங்களை கண்டு கொள்ளாததால் 4 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகவும் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், "திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பள்ளப்பட்டியில்தான் நான் வளர்ந்தேன். 2011ஆவது ஆண்டிலேயே நான் திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக திமுகவில் சீட் கேட்டு 6 மாதமாக அலைந்தோம். எந்த பலனும் இல்லை. பின்பு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை சிலமுறை சந்தித்து வாய்ப்பு கேட்டேன் . 2 கட்சிகளும் கண்டு கொள்ளாததால் திருச்சியில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் சிறுவர்களுக்குக்கூட போதைப் பொருள் கிடைக்கிறது. அதைத் தடுக்க ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 10 முறை, 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்ய்ப்படவில்லை. எல்லாம் மாற்றப்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்போம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications