மன்சூர் அலிகான் மகன் கைது.. பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கஞ்சா வந்தது எப்படி? திடுக் தகவல்
சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் புதிதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கஞ்சா கொண்டு வந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தனிப்படை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு மண்ணடி பகுதியை சேர்ந்த 2 பேர் சிக்கினர். அதேபோல் கடந்த மாதம் 30ம் தேதி காட்டாங்கொளத்தூரில் 2 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இந்த மாணவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்யும் பணியை தொடங்கினர்.
அப்போது பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) போன் நம்பரும் இருந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மன்சூர் அலிகானின் மகன் தற்போது உதவி இயக்குநராக உள்ளதோடு அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு, அதனை வாங்கி சப்ளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள் டார்க்வெப், விவிஎன் மூலமாக பாங்காக்கில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு சென்னைக்கு ஓ.ஜி. கஞ்சா வரவழைத்துள்ளனர். பாங்காக்கில் இருந்து கப்பல், விமானம் மூலம் கூரியர் வழியாக கஞ்சாவை வாங்கி உள்ளனர். ஒரு கிராம் ரூ.1,500க்கு வாங்கிய கும்பல் அதனை ரூ.3,000க்கு விற்பனை செய்ததும், இதற்காக வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.











Click it and Unblock the Notifications