"ஏங்க.. தெரியாமதான் கேட்கிறேன்.. இதெல்லாம் ரஜினிக்கு எழுச்சியா தெரியலையா".. மன்சூர் அலிகான் பொளேர்!
ரஜினிகாந்த் அரசியல் குறித்து மன்சூரலிகான் பேட்டி அளித்துள்ளார்
சென்னை: "டெல்லி ஷாகின் பாக்கில் 3 மாசமா போராடிட்டு இருக்காங்களே.. அதெல்லாம் பார்த்தால் இவருக்கு எழுச்சியா தெரியலையா? போராட்டத்தில் இருப்பவர்களை ரஜினியின் நண்பர் பிரதமர் மோடி போய் பார்க்கவே இல்லையே? இங்க நம்ம விவசாயி போராடி செத்தே போயிட்டான்... அவங்க போராட்டம் எல்லாம் மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா இவருக்கு?" என்று நடிகர் மன்சூரலிகான் ரஜினியின் கருத்து குறித்து காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினியோடு பல படங்களில் நடித்தவர் மன்சூரலிகான்.. தற்போது நாம் தமிழர் கட்சியில் உள்ளார்.. எம்பி தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.. ஆனால் இவரது பிரச்சார பாணி பெரிதும் கவரப்பட்டது.
எந்த மேடையில் தோன்றினாலும் சரி, யாருக்கு பேட்டி தந்தாலும் சரி, மன்சூரலிகானின் பேச்சு தனித்துவமாக இருக்கும்.. துணிச்சலாக இருக்கும்.. என் அண்ணன் மன்சூரலிகான் பேசறதை பார்த்து எல்லாரும் பயந்துபோய் இருக்காங்க.. ஒருத்தராலும் பதில் சொல்ல முடியல என்று அடிக்கடி சீமானும் சொல்வார்.. அந்த அளவுக்கு துணிச்சல்காரர்.. யதார்த்தமான பேச்சாக இருந்தாலும், ஆழமான கருத்தை நாக்கை பிடிங்கி கொள்ளும் வகையில் எடுத்து வைத்து பேசுவார் மன்சூர்! இதுபோன்று பலமுறை ரஜினியின் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் குறித்து கருத்தும் சொல்லி உள்ளார்.
தேர்தல் அறிக்கை
ஒருமுறை "பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைக்கப்படும் ன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு ரஜினியும் வரவேற்பு தெரிவித்துள்ளாரே?" என்று மன்சூரிடம் கேட்கப்பட்டது.. அதற்கு "இப்படி ஒரு கோமாளித்தனமான அறிக்கையும், அதுக்கு ஒரு பதிலும் இருக்க முடியாது.. இப்படியே சொல்லிட்டு இருக்கான். அப்ப இத்தனை நாளா நதிகளை இணைக்காம, என்னத்த இணைச்சுட்டு இருந்தான்? கடவுள் விரும்பினால், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இப்படியே சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான். ரஜினிதான் சொம்பு தூக்கறார்னு தெரியுது இல்லை? ரஜினி இவருடைய ஏவல்னு தெரியுது.... கேவலமா இருக்கு... நதியில இருந்து எங்க இருந்து எங்க இணைப்போ? எப்படி இணைப்பே? இதெல்லாம் கேனைத்தனமா இல்லை? வெட்கமா இல்லை? நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு" என்றார். இந்த அதிரடி பதில் அப்போது மிகப்பெரிய சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நக்கீரனுக்கு பேட்டி
அந்த வகையில் சமீபத்தில் லீலா பேலஸிலும் ரஜினி அரசியல் தொடர்பாக பேசியிருந்தார்.. இதைபற்றி தமிழகத்தின் முன்னணி இதழான நக்கீரன் மன்சூரலிகானிடம் ஸ்பெஷல் பேட்டியை எடுத்துள்ளது... மன்சூரலிகான் தன் பாணியிலேயே அளித்த கேஷூவல் பதில்கள்தான் இவை:
தூத்துக்குடி
"நான் இன்னைக்கும் ரஜினியின் ரசிகன்தான்.. ரஜினி நல்ல மனிதர்... நடிப்பில் திறமையானவர்... மக்கள் எழுச்சி வரவேண்டும் என்கிறார்... மக்கள் எழுச்சி இருப்பதால்தான் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன... லட்சம் பேர் திரண்டு தூத்துக்குடியில் போராடினார்களே... போராடிய மக்களை சுட்டுக்கொன்றார்களே... அங்கு லட்சம் பேர் திரண்டது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா?
அய்யாக்கண்ணு
தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து போராடி விவசாயி செத்தே போயிட்டான்... மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து விவசாயிகள் போராடியது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்தினார்களே விவசாயிகள், அது எழுச்சியாகத் தெரியவில்லையா?
ஷாகின்பாக்
இந்தியா முழுவதும் சிஏஏவை எதிர்த்து போராடுகிறார்களே அது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து மூன்று மாதமாக போராடுவது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்த போராட்டத்தில் 70 வயதை தாண்டிய பெண்களும் பங்கேற்றிருப்பது எழுச்சியாகத் தெரியவில்லையா?
திசை திருப்புகிறார்
அந்தப் போராட்டத்தில் இருப்பவர்களை ரஜினியின் நண்பரான பிரதமர் மோடி போய் பார்க்கவே இல்லையே? நம்ம அப்பா, தாத்தாக்களுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அதுகுறித்து ரஜினி கேள்வி எழுப்பியிருந்தால் நம்ம தலைவர் கேட்டுவிட்டார் என்று மக்கள் எழுச்சி வந்திருக்கும். கேள்வி கேட்டாரா? 2012-ல் இவரால் எந்த மாற்றமும் வராது... அவர் எழுச்சி என்று சொல்வது தனது ரசிகர்களை திசை திருப்புகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்... ரஜினியின் பேச்சு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்... ரசிகர்களுக்கு அல்வா கொடுத்ததுபோலத்தான் இருக்கிறது அவரது பேச்சு" என்றார்.