தீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
தென் மாநிலங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்தது. கேரளாவில் இதனால் மூணாறில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது.
அதேபோல் தற்போது கேரளாவில் மலப்புரம், வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மிக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரியில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி நிலை
நீலகிரியில் இரண்டு நாட்களாக புயல் காற்றுடன் மழை பெய்தது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 36 செ.மீ., மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை வங்ககடல் பகுதியில் தீவிரமாக உள்ளது. இதனால் கேரளாவை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தற்போது மழை
இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர், வந்தவாசி சாலை, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
சென்னையை பொறுத்தவரை இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இன்று இரவுக்கு மேல் தென் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி, உடையார்பாளையம், கீழப்பழுவூர், திருமானூர்,பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

வால்பாறை எப்படி
வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களில் சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில், 38 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி உள்ளது. அதேபோல் நன்னிலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications