இந்த முறை மிஸ் ஆகாது.. மகளிர் உதவித் தொகை பெற.. ரேஷன் கார்டுக்கு போட்டி போடும் மக்கள்
சென்னை: மகளிர் உதவித் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பப் படிவம் வழங்கப்படவுள்ளதால், தனி குடும்ப அட்டைக்கு பலரும் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலையில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை கோரி 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர்.

அரசு விதித்த விதிமுறைகளின் அடிப்படையில், 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பலர் விடுபட்டிருந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டிருக்கிறது.
அப்படி விடுபட்டவர்களுக்கும் கிடைக்கும் வகையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப படிவம் மீண்டும் வழங்கப்படவுள்ளதால் பலரும் பெற்றோரின் ரேஷன் அட்டையில் உள்ள பெயரை நீக்கம் செய்து தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் மகளிர் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, மீண்டும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி சட்டசபையில், மகளிர் உரிமை தொகை பெற கடந்த முறை விண்ணப்பித்து விடுபட்டவர்கள் புதிதாக விண்ணப்பிக்கும் வகையில், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உதவித் தொகை பெறுவதற்காக பெற்றோரின் ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்கம், புதிய ரேஷன் கார்டு பெறுவதற்காகவும் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகளிர் உதவித் தொகை பெறுவதற்கு குடும்ப அட்டை முக்கியம் என்பதால் பலர் தங்களுடைய பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கவும். புதிய குடும்ப அட்டை பெறவும் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. தனி வீடுகளில் தனி முகவரியுடன், தனி கேஸ் இணைப்பு ஆகியவை வைத்திருக்கும் தகுதியான நபர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே பெயர் நீக்கம், புதிய அட்டைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications