ரஜினி ரசிகர்களே! உங்க தலைவருக்கு நெருக்கடி தருவது சரிதானா? அல்லது தூண்டிவிடப்படுகிறீர்களா?
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும் என அவரது ரசிகர்கள் சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர். உடல்நிலையை சுட்டிக்காட்டி அரசியலுக்கு வரவில்லை என மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்களே நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த போராட்டங்கள் சரிதானா? என்பதை அவர்கள் உணரவில்லை போல.
Recommended Video

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். கொரோனா தாக்கம், உடல்நிலை பாதிப்பு என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தார் ரஜினி. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் ரஜினிகாந்த்.
ஆனாலும் ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ரஜினி மன்றத்தின் தடையை மீறி..
இத்தனைக்கும் ரஜினிக்கு எதிரானதாக கருதப்படும் இந்த போராட்டத்தில் ரசிகர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தி இருந்தது. இந்த அறிவுறுத்தலை நிராகரித்து ரசிகர்கள் என சென்னையில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இது பலகேள்விகளை எழுப்புகிறது.

எந்த வகை நியாயமோ?
தங்களது தலைவர் உடல்நிலை கருத்தில் கொண்டு அறிவித்த ஒரு முடிவை திரும்பப் பெறுங்கள்; உடனே அரசியலுக்கு வாருங்கள் என நிர்பந்தம் தருவதை எப்படி புரிந்து கொள்வது? ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் அவரை தலைவராக கொண்டாடுகிற ரசிகர்களின் மனநிலையா? ரஜினியின் உளப்பூர்வமான அறிக்கையை ஏற்காமல் நிராகரித்து போராடுவது எந்த வகையில் நியாயமானது?

ரஜினிகாந்துக்கு நெருக்கடி
ரசிகர்கள் என கூறிக் கொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்துவது ரஜினிக்கு எத்தனை நெருக்கடி? மன அழுத்தங்களை தரக் கூடும் என்பதை அவர்கள் உணரவில்லையா? இப்படியான போராட்டங்களால் ரஜினிகாந்த் எத்தனை கவலைப்படுவார்? என்பதை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவே இல்லையா இந்த ரசிகர்கள் கூட்டம்? அப்பட்டமான உங்கள் சுயநலத்தை நீங்கள் வெளிப்படுத்துவதாக தோன்றவும் இல்லையா?

யாருடைய தூண்டுதலோ?
அல்லது ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், விரக்தி அடைந்தவர்களின் தூண்டுதல்களில்தான் இந்த போராட்டங்களை நடத்துகிறீர்களா? ரஜினிகாந்தை அரசியல் களத்தில் பலி ஆடாக்க முனைந்தவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துவிட்டார்.. அதை புரிந்து கொள்ளாமல் அந்த அரசியல் வேட்கை கொண்டவர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்களாகிய நீங்கள் இரையாகிக் கொண்ண்டிருக்கலாமா? உங்களது மனநிலைதான் என்னவோ?












Click it and Unblock the Notifications