போன் வந்தாலே பயப்படுவேன்.. நரகமானது.. எழுத்தாளர் கோணங்கி மீது இளைஞர்கள் பாலியல் புகார்.. அதிர்ச்சி
கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை: பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது பல்வேறு இளைஞர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளனர்.
பிரபல எழுத்தாளர் கோணங்கி பல்வேறு மதினிமார்கள் கதை சிறுகதை தொகுப்பு தொடங்கி பல்வேறு கதைகளை, தொகுப்புகளை எழுதி இருக்கிறார். 1980-களின் தொடக்கத்திலிருந்து இவர் தமிழ் இலக்கிய உலகில் பங்களிப்பை நிகழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் கோணங்கி மீது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பாலியல் ரீதியான புகார்களை வைத்து வருகின்றனர். முக்கியமாக தன்பாலின ரீதியாக பாலியல் தாக்குதல்களை, சுரண்டல்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளனர்.

புகார் என்ன?
இது தொடர்பாக மாணவர் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டில் (அவரின் பேஸ்புக் போஸ்ட்) , இயற்பியல் மாணவனான எனக்கு கல்லூரி சூழல் தமிழ் இலக்கியம், நாடகம் சார்ந்த அறிமுகத்தை வழங்கியிருந்த காலம். என் ஆர்வமிகுதியை பார்த்த பேராசிரியர் நல்லெண்ணம் கருதி மணல்மகுடி நாடக குழுவிடம் அறிமுகப்படுத்தினார். 2013 ஜனவரி மாதம், குழுவில் இணைவதற்கு முன்பே மணல்மகுடியின் நாடகப் பிரதி, முருகபூபதியின் நேர்காணல்களை கல்லூரி நூலகத்தில் வாசித்திருந்தேன். கோணங்கியின் பிதிரா, பாழி போன்ற நூல்ககளை பார்த்திருந்தேன். பதின்மவயது பையனான நான் குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி நட்புவட்டம் தாண்டி சந்திக்கும் நபர்கள் இவர்கள். குழுவில் சேர்ந்த சில வாரங்களில் சர்வதேச நாடக விழாவிற்காக புது டில்லி பயணம் மற்றும் கோணங்கி அறிமுகம் என வாழ்வு கனவுபோல் இருந்தது.

கோணங்கி - பூபதி
கோணங்கி தனிப்பட்ட முறையில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அழைத்து, பாலியல் சீண்டல்களை செய்துக் கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், நமக்கு தீங்கு விளைவிக்கமாட்டார் என 100% நம்பினேன். கோணங்கியையும் பூபதியையும் God Father போல நினைத்துக் கொண்டிருந்த பதின்மவயது பையனான எனக்கு பாலியல் சுரண்டல் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதன் பின்னர் கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும். பாலியல் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு கோணங்கியின் போன் அழைப்புகளை தவிர்ப்பேன். அப்போதெல்லாம், பூபதி அழைத்து "கோணங்கிக்கு உதவி தேவை நீ உடனே அண்ணனை பார் என ஆணையிடுவார்". பூபதியின் வார்த்தைகளை தட்டஇயலாமல் உடன் நண்பர்களை அழைத்தச் சென்று சூழலை சமாளிக்க திட்டமிடுவேன். அதற்கும் கோணங்கி கண்டிப்பார். "இவ்வாறு தான் மௌனியும் நகுலனும் தனக்கு இலக்கியம் படைக்கும் ஆற்றலை வழங்கினார்கள் உனக்கும் அது கிடைக்கும்" என்பார். அதாவது ஆண்குறி வழியாக இலக்கிய படைப்பாற்றல் தலைமுறை தலைமுறையாக கைமாறுகின்றது என்கிறார்.

விழிப்புணர்வு
கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் சுரண்டலால் மனசிதைவுக்கு உள்ளானேன். அவ்வாறான மன உணர்வும் கலைஞனை வளர்த்தெடுக்கும் என நம்பவைக்கப்பட்டேன். உள பிரச்சனைகளுக்கு காரணம் பாலியல் சுரண்டல் தான் என்ற விழிப்புணர்வுஇன்றி இருந்தேன். என் சீரற்ற மனநிலையை கருதி குடும்பத்தினர் என்னை நாடகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுகூட நாடக குழு மீது எனக்கு பற்று குறையவில்லை. நாட்கள் செல்ல செல்ல மனநிலை நரகமானது. என் உளச்சிக்கல்களின் விளைவாக தற்கொலை எண்ணங்கள் வந்தது. அதன்பின்னர் என் குடும்பத்தினர் அரவணைப்புடன் , தீவிர மனநல ஆலோசனையின் கீழ் ஒரு வருட காலத்திற்கு மேலாக இருந்தேன். அப்போது கோணங்கி மற்றும் பூபதியிடம் இருந்துவிலகி இருந்தேன்.

புகார்
நிகழ்த்துக்கலை ஆய்வுகளுக்காக நீண்ட காலத்திற்கு பிறகு 2021ல் மணல்மகுடி குழுவினருடன் நெருக்கமானேன். இந்த சில மாதங்களாக பாலியல் வன்முறை பற்றிய புரளிகளாகவும் நகைச்சுவையாகவும் பேச்சு வந்தது. மணல்மகுடியில் ஜெயபிரகாஷ் என்ற இளம் நாடக நடிகன், தனக்கு பாலியல் சுரண்டலால் social anxiety இருப்பதை சொன்ன போது எனக்கிருந்த உளப்பிரச்சணைகளுக்கும் கோணங்கி மற்றும் மணல்மகுடி சூழல் உருவாக்கிய பாலியல் வன்முறைதான் காரணம் என உணர்ந்த போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.இங்கு கோணங்கியின் பாலியல் வன்முறைகள் normalise ஆக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக வன்முறைக்கு உள்ளான எவருக்கும் பூபதியோ கோணங்கியோ நேரடியாக பதில் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட டஜன் கணக்கில் இளம் நாடக கலைஞர்களும் வாசகர்களும் கோணங்கியால் தொடர் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களாக தன் அனுபவத்தை வெளியே சொல்வார்கள் நான் யாரையும் குறிப்பிட இயலாது. அநாமதேயமாக பாலியல் வன்முறை குறித்து பொதுவெளியில் பேச்சு வந்ததால் நானும் சுய அனுபவத்தை பதிவிடும் தைரியம் பத்துவருடங்களுக்கு பின் கிடைத்திருக்கிறது. இது ஒரு விழிப்புணர்வுக்கானது. எதிர்வரும் காலத்தில் இது தொடர கூடாது. கலை மற்றும் இலக்கியம் சார் சமூகம் தன்னுள் ஒரு எதிர்வினையாற்ற வேண்டும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் பலர்
அவரின் இந்த போஸ்டை தொடர்ந்து இன்னும் பல இளைஞர்கள் இதே புகாரை இணையத்தில் வைத்து உள்ளனர். இலக்கிய உலகில் இருக்கும் பல இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் இதே புகாரை வைத்து உள்ளனர். இந்த புகார் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது jeyamohan.in பக்கத்தில், கோணங்கிமேல் இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் வலுவான பொதுச்சமூகக் கண்டனத்திற்குரியது. முதிரா இளைஞர்களிடம் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அது சட்டப்படி குற்றமும் கூட. ஆகவே ஒரு சமூக உறுப்பினராக அச்செயலை கண்டிக்கிறேன். இளைஞர்கள் இனிமேல் அவரிடம் கவனமாக இருக்கலாம். கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார்.

கோணங்கி விளக்கம்
அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும். நான் கோணங்கியை அவருடைய தொடக்ககாலச் சிறுகதைகளுக்காக முதன்மையான இலக்கியக் கலைஞராகவே மதிக்கிறேன். இந்த விவாதத்தால் அம்மதிப்பீடு மாறப்போவதில்லை, என்று இதை பற்றி கூறி உள்ளார். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ள கோணங்கி, இந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன். திட்டமிட்டு இதை பரப்புகிறார்கள். என் மீது ஏன் இப்படி இவர்கள் புகார் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் நாடக குழுவின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை தடுக்க இப்படி செய்கிறார்களோ என்று தோன்றுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications