தமிழ்நாட்டில் நிறைய தற்குறிகள் சுற்றுறாங்க... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
சென்னை: தமிழக அரசியலில் சமீப காலமாக தற்குறிகள் என்ற வார்த்தையும் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தற்குறிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி அதிகம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்குறிகள் என்றால் என்ன அர்த்தம் என்று பேசியதோடு.. தமிழ்நாட்டில் தற்போது நிறைய தற்குறிகள் சுற்றுவதாகவும் பேசியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேலூரில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய ஆனந்த் வெங்கடேஷ், மாணவ, மாணவிகள் அவசியம் புத்தகம் படிக்க வேண்டும் என்று கூறினார்.

தற்குறிகளுக்கு என்ன அர்த்தம்
மேலும், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் வரும் தகவல்களை நம்பாமல் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் பல தற்குறிகள் சுற்றிக்கொண்டு இருப்பதாக கூறியதும் மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கைத்தட்டினர். ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:-
"ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல நினைத்தேன். தற்குறிகள் என்று ஒரு வார்த்தை இருக்கு. நான் எதையும் அர்த்தப்படுத்தி சொல்லவில்லை. தற்குறிகள் என தமிழ்வார்த்தை இருக்கு என்று மட்டுமே சொன்னேன். இன்றைக்கு தற்குறிகள், தற்குறிகள் என்று பல பேர் பேசுகிறார்கள். ஆனால், தற்குறிகளுக்கு என்ன அர்த்தம் என்றால், படிக்காதவர்களுக்கு பெயர்தான் தற்குறிகள்.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல
தன்னைத்தானே குறித்துக்கொள்ளுதல், அதாவது கைநாட்டு போடுவாங்க... அவங்கள்தான் தற்குறி. அந்த காலம் தாண்டி போய் இன்றைக்கு எல்லாருமே படித்து இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைக்கும் நாம தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம் அல்லவா... அப்போ தற்குறி என்ற வார்த்தைக்கு பொருத்தம் வேண்டும். அந்த வார்த்தை என்ன தெரியுமா?
புத்தகங்கள் படிக்காமல் தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் தற்குறிகள். இன்றைக்கு தமிழ்நாட்டில் பல தற்குறிகள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்" என்றார். முன்னதாக தொழில்நுட்பத்தை தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது: "வெற்றி பெறுவதற்கான அளவுகோல், மதிப்பெண்கள் இல்லை. மதிப்பெண், சம்பளம் ஆகியவை மட்டுமே வாழ்க்கை அல்ல.
உதவும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்
மகிழ்ச்சிதான் உண்மையான வாழ்க்கை. உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லாதவர்கள்தான் தவறான வழியில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையின் அடித்தளம் மகிழ்ச்சிதான் என்பதை உணர வேண்டும். புத்தகம் நமக்கு தரும் அறிவு நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தி தொழில்நுட்பத்தை தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே தவிர அதன் கட்டுப்பாட்டில் நாம் அடிமையாகிவிடக்கூடாது. மாணவர்களின் வாழ்க்கையில் பள்ளி பருவம் முக்கியமானது. அந்த பருவத்தில் கிடைக்கும் அன்பு, நட்பு எப்போதும் நிலைக்கும். மாணவர்கள் மாற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல்வேறு வழக்குகளில் அதிரடியாக தீர்ப்பளித்தவர் என்ற பெருமை பெற்றவர். குறிப்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை தாமாக முன்வந்து மறுஆய்வு செய்யும் விசாரணைக்கு எடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications