மாரிமுத்துக்கு அம்மா என்றால் உயிர்! அக்கா தம்பி என மொத்தம் 8 பேர்! ஊரில் பெரிய குடும்பமாம்!
சென்னை: திடீர் மாரடைப்பால் மறைந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்துக்கு அம்மா என்றால் உயிராம். சென்னையில் இருந்தாலும் அம்மாவிடம் அடிக்கடி பேசி நலம் விசாரித்துக் கொண்டே இருப்பாராம்.
தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தில் அக்கா, தம்பி என மொத்தம் 8 பேர். மாரிமுத்துவின் பெற்றோருக்கு வரிசையில் 4 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் 5வது பிறந்த ஆண் குழந்தை தான் மாரிமுத்து. தவமிருந்து பெற்றெடுத்த மூத்த மகனை கொண்டாடி வளர்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.

மாரிமுத்துக்கு பிறகு 3 தம்பிகள் பிறந்திருக்கிறார்கள். தற்போது மாரிமுத்துவின் 4 அக்காள்களும் ஊரில் தான் வசித்து வருகிறார்கள். அதேபோல் அவரது அம்மாவும், தம்பிகளும் ஊரில் தான் இருக்கிறார்கள். ஒரே ஒரு தம்பி மட்டும் மாரிமுத்துவுடன் அந்தக் காலத்திலேயே சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார். அவருக்கு சினிமா செட் ஆகாததால் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு இப்போது ஊர் திரும்பியுள்ளார்.
ஒரு காலத்தில் அக்கா, தம்பி என குடும்பத்தில் 8 பிள்ளைகளுடன் ஊரிலேயே பெரிய குடும்பமாக திகழ்ந்திருக்கிறது மாரிமுத்து குடும்பம். இதனிடையே தனது ஊர் குறித்தோ அக்கா, தம்பிகள், குடும்ப பிண்ணனி குறித்தோ மாரிமுத்து பெரியளவில் பேட்டிகளில் கூறியது கிடையாது.
என்னதான் சென்னையில் வசதி வாய்ப்புகள் வந்தாலும், சொந்தமாக வீடு கூட கட்டியிருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் தான் நடைபெறவுள்ளது. மாலை 3 மணியளவில் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்து உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளை தேனி மாவட்டத்தில் நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் எதிர்நீச்சல் சீரியல் குழு பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications