மாரிமுத்து மரணத்தால் அதிர்ச்சி.. "என் மகன் எப்போ வருவான்".. திரும்ப திரும்ப கதறும் தாய்
சென்னை: நடிகர் மாரிமுத்து இறந்த செய்தி கேட்ட அவருடைய தாய் தனது மகன் வருவான் என்ற ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்வதாக சகோதரி பாக்கியம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த மாரிமுத்துவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தை அடுத்த வருசநாடு. இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்னை வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட மாரிமுத்து பின்னர் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று எதிர்நீச்சல் சீரியல் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நெகட்டிவ் ரோல் என்றாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் இன்று காலை டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பினாராம். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை உறவினர்கள்மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி, மகன், மகள், உறவினர்கள் என கதறி அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த நிலையில் இறந்த மாரிமுத்துவின் சகோதரி பாக்கியம் கூறுகையில் என் தம்பியின் உடலுக்கு ஒன்றுமே இல்லை. அவர் நன்றாகத்தான் இருந்தார். திடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்துவிட்டார். என் தம்பி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் படாத கஷ்டம் இல்லை.
நாங்கள் திரும்பி வந்துடு என அழைத்தாலும் வராமல் வைராக்கியத்துடன் இருந்தார். என் தம்பி கடைசியாக 60 நாட்களுக்கு முன்னர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அப்போது பார்த்து பேசினேன். போனில் 10 நாட்களுக்கு முன்பு பேசினேன். அவர் கொடுக்கும் பேட்டி, சீரியல், சினிமா என நாங்கள் கண்டு ரசித்தோம்.
போனில் பேசும் போது கூட ஆதி குணசேகரனாக நீ நடிப்பதற்கு எல்லாரும் வையறாங்க என வருந்தினேன். அதற்கு அவரோ அக்கா அதெல்லாம் இல்லை, திட்ட திட்டதான் வளர முடியும் , அதையெல்லாம் நீ மனதில் வைத்துக் கொள்ளாதே என்றார். என் தம்பிக்கு நாட்டுக் கோழி குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். எப்போது வந்தாலும் என் கையால் குழம்பு வைத்து தருவேன்.
எனது அப்பாவிடம் இருந்துதான் இந்தாம்மா ஏய் என்பது தனக்கு வந்ததாக பேட்டியில் என் தம்பி தெரிவித்திருந்தாரே. எங்களுக்கு அப்பாவுமாக இருந்தாரே என் தம்பி. என் அம்மாவுக்கு தம்பியின் இறப்பு செய்தியை சொல்லியிருக்கிறோம். அவர் "என் மகன் வருவான், என் மகன் வருவான்" என சொன்னதையே திரும்ப திரும்ப கூறி வருகிறார். என் தாயை என் மகன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்தார். இவ்வாறு பாக்கியம் தெரிவித்தார்.
நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு குடும்பத்தினர் உடன் பணியாற்றியவர்கள் என கலங்கி வரும் நிலையில் அப்பகுதி மக்களும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. அப்பகுதி மக்களிடம் மாரிமுத்து எத்தனை அன்பாகவும் பண்பாகவும் பழகியிருந்தால் இப்படி அவர்கள் அழுவார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. மாரிமுத்து முதலில் சம்பாதித்த காசில் சைக்கிளை வாங்கியதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications