ஜெ. சமாதியில் திருமணம்.. சுவாதி கழுத்தில் சந்தோஷமாக தாலி கட்டிய ஜெயதேவன்.. இப்படியும் ஒரு பக்தர்
ஜெயலலிதா சமாதியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
சென்னை: "எனக்கு பேரு வெச்சதே இவங்கதான்.. எங்க குடும்பமே விரும்பற ஒரே தலைவியும் இவங்கதான்.. அதனாலதான் இவங்க பிறந்த நாளைக்கு இங்க வந்து கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கேன்" என்று இளைஞர் ஜெயலலிதா சமாதியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சமாதிக்கு ஒரு புதுமண தம்பதி தங்களது பெற்றோர், உறவினர்களுடன் வந்திருந்தனர். சமாதியை மணமக்கள் தொட்டு கும்பிட்டனர். பிறகு இளைஞர் தாலி எடுத்து மணப்பெண் சுவாதியின் கழுத்தில் கட்டி கல்யாணம் செய்து கொண்டார். இதுபற்றி விசாரித்தபோது இளைஞர் சொன்னதாவது:
"சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன் நான். என் பெயர் ஜெயதேவன். 1990-ல் ஜெயலலிதா அம்மா ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார். அப்போது குழந்தையாக இருந்த என்னை என் அப்பா, அவங்ககிட்ட கொடுத்து பேர் வைக்க சொன்னார். அவங்கதான் எனக்கு ஜெயதேவன்-ன்னு பேர் வெச்சாங்க. எனக்கு பேர் வெச்சதால மட்டும் இல்ல, எங்க குடும்பத்துல எல்லாருமே விரும்பும் தலைவி அவங்கதான்.
அவங்க முன்னிலையில் என் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் அவங்க இறந்துட்டாலும், அவங்க சமாதியில வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இன்னைக்கு அவங்க பிறந்த நாள்.. இதனால அவங்களே எங்களை நேரில் வாழ்த்துவது போல இருக்கிறது" என்றார் மாப்பிள்ளை ஜெயதேவன்.
இருந்தாலும் சரி.. இறந்தாலும்சரி.. கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே மவுசு இன்னமும் நீடித்து இருக்கிறது என்றால் அது ஜெயலலிதாவுக்குதான்!!