“ஷாக்” காரணம்.. மதுரை ரயில் தீ விபத்து பற்றி போட்டு உடைத்த பாலகிருஷ்ணன்! 10 பேர் பலியானது ஏன்?
சென்னை: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இருக்கிறது.
மதுரை ரயில்நிலையில் நிறுத்தப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற ரயில் பெட்டியில் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வே தரப்பில், தமிழ்நாடு அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "மதுரை ரயில் நிலையத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்ததும், 20க்கும் மேற்பட்டோர் காயமுற்ற சம்பவம் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. சுற்றுலா பயணிகள் பயணம் செய்த (தனியார் பார்ட்டி கோச்) ரயில் பெட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி உணவு சமைத்ததன் விளைவாகவே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகி உள்ளது. எனவே, இது போன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ரயில்வே துறையின் நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்திட வேண்டும் எனவும், படுகாயம் அண்டைந்து சிகிச்சை பெறுவோர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications