திமுகவிடம் 2 தொகுதிகளுக்கு மேல் தான் கேட்போம்! பார்த்துகலாம் விடுங்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூல்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஏற்கனவே பெற்ற 2 தொகுதிகளுக்கு குறைவாக எப்படி பெறுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வினவியுள்ளார்.
இதன் மூலம் கடந்த முறையை போல் இந்த முறையும் குறைந்தது 2 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டு வாங்கிவிடுவோம் என்பதை சூசகமாக சொல்லிவிட்டுச் சென்றார். இதனிடையே எத்தனை சீட் உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியதால், விடுங்க பார்த்துக்கலாம் எனக் கூலாக கூறிவிட்டு நகர்ந்தார் பாலகிருஷ்ணன்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்ட 4 பேர் இன்று நண்பகல் சந்தித்துப் பேசினர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதோ என வெளியே வேகமாக தகவல்கள் பரவின. ஆனால் திமுகவை பொறுத்தவரை எப்போதுமே தலைவரோ, பொதுச்செயலாளரோ நேரடியாக கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் கூட்டணி பற்றியோ, சீட் பங்கீடு குறித்தோ பேசமாட்டார்கள். அமைச்சர்கள் நேரு, வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அந்த குழு தான் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்.
இதனால் இன்று நடந்த கே.பாலகிருஷ்ணன் -ஸ்டாலின் சந்திப்பு என்பது சம்பிரதாய சந்திப்பாகவே இருந்தது. நடப்பு அரசியல், அதிமுக -பாஜக கூட்டணி பிளவு குறித்தெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சீட் பங்கீடு குறித்தோ எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பது பற்றியோ மார்க்சிஸ்ட் தரப்பில் பேசப்படவில்லை.
அண்மையில் முஸ்லீம் லீக் பவள விழா மாநாடு நிறைவு விழாவுக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக காதர் மொகிதீன் அண்ணா அறிவாயலம் சென்ற போதும் இது போல் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிவிட்டதாக தகவல் பரவியது.
இதனிடையே அதிமுகவை நம்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லாது என்பது மட்டும் கே.பாலகிருஷ்ணனின் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications