மக்களவை தேர்தலில் மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் போட்டி! தொகுதி மாற காரணம் என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு மக்களவை தொகுதிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அக்கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் என்னென்ன தொகுதிகள் என அடையாளம் காணப்படாமல் இருந்தது. இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை அறிவாலயத்தில் நடந்த தொகுதி அடையாளம் காணும் ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு மேற்கண்ட இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எந்த தொகுதி: இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் மாறியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு மதுரையும் கோவையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறையும் அதே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில் கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை அறிவாலய வாயிலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு மதுரையும் திண்டுக்கல்லும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த தேர்தலில் வென்ற கோவை தொகுதியை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோம்.
திமுக வென்ற திண்டுக்கல் தொகுதியை எங்களுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்கள். தேர்தல் பத்திரத்தின் மூலம் பாஜகவை நீதிமன்றம் முழுக்க முழுக்க அம்பலப்படுத்தியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், மதசார்பற்ற கூட்டணி இந்தியா கூட்டணியில் இணைந்து தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.
கூட்டணி பேச்சுவார்த்தை: கடந்த 29ஆம் தேதி திமுகவுடன் நடத்திய கூட்டணி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதையடுத்து இறுதியாக இன்று காலை முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நானும் கையெழுத்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டோம்.
40 தொகுதிகளிலும் வெல்வோம்: அதில் மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த இரு தொகுதிகள் மட்டும் இல்லை, தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். கோவைதான் முதலில் பரிசீலனையில் இருந்தது. அதற்கு பதிலாக திண்டுக்கல்லை பெற்றோம். திண்டுக்கல்லில் கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.
குஷ்பு அரசியல்வாதியா: குஷ்பு எல்லாம் ஒரு அரசியல்வாதியா, மகளிர் உரிமைத் தொகையை அவர் பிச்சைக் காசு என சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. குஷ்பு மாறாத கட்சி எந்த கட்சி என தெரியவில்லை. எனவே அவர் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக ராமர் கோயிலை கட்டலாம் என பார்த்தார்கள். அதுவும் கை கொடுக்கவில்லை. அதனால் சிஏஏ என்ற சட்டத்தை பயன்படுத்தி மத அடிப்படையில் மக்களை பிரித்து மோதலை உண்டாக்கி வெற்றி பெற நினைக்கிறார்கள். தேர்தல் பத்திர பிரச்சினையை திசை திருப்பவே சிஏஏ வை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications