கட்டப்பை தராட்டிகூட பரவாயில்ல.. துணிக்கடைக்கு போனா ‘அத’ மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க மக்களே..!
கட்டப்பை தராட்டிகூட பரவாயில்ல.. துணிக்கடைக்கு போனா ‘அத’ மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க
சென்னை: கொரோனா தாக்கத்தின் காரணமாக விட்ட லாபத்தை மீண்டும் பிடிக்க, துணிக்கடைகள் புதிய யுக்தியைக் கையில் எடுத்துள்ளன.
கொரோனாவால் கிட்டத்தக்க 40 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்த ஜவுளிக் கடைகளில் தற்போது தான் விற்பனை சூடு பிடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை பக்கத்தில் இருப்பதால், புதுத்துணிகள் வாங்க இஸ்லாமியர்கள் ஒருபுறம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு, வெளியூரில் மாட்டிக் கொண்டவர்களும் ஒரு பை துணியையே திரும்பத் திரும்ப போட்டு கிழித்து விட்டதால், புதுத்துணி வாங்க ஜவுளிக்கடையை மொய்த்து வருகின்றனர்.
ஏசி பொருத்தப்பட்ட பெரிய ஜவுளிக் கடைகளைத் திறக்க இன்னமும் அரசு அனுமதி தராததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களைக் கவர சின்னச் சின்ன ஜவுளிக் கடைகள் புதிய யுக்திகள் பலவற்றைக் கையில் எடுத்துள்ளன.
அதில் ஒன்று தான் துணி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்குவது.
கொரோனாவுக்கு எதிராக மாஸ் வெற்றி.. மனிதர்களிடம் வேலை செய்கிறது தடுப்பூசி! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
மாஸ்க்கின் அவசியம்
எப்படியும் இன்னும் சில காலத்திற்கு அனைவரும் மாஸ்க் அணிந்தே வெளியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. திரும்பத் திரும்ப ஒரே மாஸ்க்கையே பயன்படுத்த இயலாது என்பதால், ஒவ்வொருவரும் கையில் இரண்டு மூன்று மாஸ்க்காவது வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ரோட்டோரக் கடைகள்
இதனால் ரோட்டோரங்களில் பல மாஸ்க் கடைகள் புதிதாக முளைத்துள்ளன. குறைந்தபட்சம் ஒரு மாஸ்க் பத்து ரூபாய் என்ற அளவில் தான் விற்பனை செய்யப்படுகிறது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாஸ்க் வாங்குவதென்றாலே எப்படியும் ஐம்பது ரூபாய்க்கு மேலாகி விடுகிறது.
புதிய யுக்தி
இதையே தங்களது வியாபார யுக்தியாக்கிக் கொண்ட ஜவுளிக்கடை முதலாளிகள், தற்போது வாடிக்கையாளர்களை கவர கட்டப்பைகளுக்கு பதில் முககவசங்களைத் தரத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் ஜவுளித் தொகைக்கு ஏற்ப மாஸ்க் எண்ணிக்கையும் கூட்டித் தரப்படுகிறது.
கட்டப்பை முக்கியம் பிகிலு..
நம்மாளுகளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஜவுளியை விட, 10 ரூபாய்க்கு அவர்கள் தரும் கட்டப்பை மீது தான் ஆசை அதிகம். ‘கட்டப்பை முக்கியம் பிகிலு' என பிகில் பட மைக்கேல் ரேஞ்சுக்கு கங்கணம் கட்டிக் கொண்டுதான் ஜவுளிக்கடைக்கே செல்வார்கள். சமயங்களில் கட்டப்பை தராவிட்டால் சண்டைக்கே போகும் வாடிக்கையாளர்கள் கூட உண்டு.
தாராளம்
தற்போது அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை இலவச மாஸ்க் சந்தோசப்படுத்தியுள்ளது என்றுதான் கூற வேண்டும். அந்தக் கடைக்கு போனா மாஸ்க் இலவசமா தர்றாங்கப்பா என தனது நண்பர்களுக்கும் சிபாரிசு செய்கின்றனர். முதலாளிகளும் மாஸ்க் தயாரிக்க அதிகம் செலவு பிடிப்பதில்லை என்பதால், வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக மாஸ்க்கை அள்ளித் தந்து வருகின்றனர்.