வாக்களிக்க சொந்த ஊர் கிளம்பிய மக்கள்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடப்பதால் சொந்த ஊரில் வாக்குகள் உள்ளவர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றுவதற்காக பஸ், ரயில்களில் புறப்பட்டனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி, பொங்கல் பண்டிகை விடுமுறை போல பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததை பார்க்க முடிந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.

அலைமோதிய பயணிகள் கூட்டம்
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் பணி நிமித்தமாகவும், கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காகவும் பலரும் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கும் சொந்த ஊர்களில் வாக்குகள் இருப்பதால், வாக்களிப்பதற்காக சொந்த ஊர் கிளம்பியுள்ளனர். இதனால், நேற்று மாலையில் இருந்தே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி, பொங்கல் பண்டிகை விடுமுறை போல பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததை பார்க்க முடிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. எழும்பூர் செண்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.

சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. அதேபோல, தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இன்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications