தண்டவாளத்தில் இறங்கி நடந்த சென்னை பயணிகள்! சொதப்பிய 49 எலக்ட்ரிக் ரயில் சேவை: செங்கல்பட்டில் மாற்றம்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மிக முக்கியமான பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி, ரயில் பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகின்றன..
சென்னையில் ரயில் சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. அத்தியாவசியமான ஒன்று.. ஆனால், ஏற்கனவே ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை கடற்கரை செங்கல்பட்டு
குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திடீர் மாற்றத்தால் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்..
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.. இந்தப் பணிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக, வழக்கமாக இந்த நடைமேடைகளில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தற்போது 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன..
இந்த இடமாற்றத்தினால் ரயில்களை இயக்குவதில் தொழில்நுட்ப சிக்கல்களும், சிக்னல் கிடைப்பதில் தாமதமும் ஏற்பட்டு வருகின்றன.. முன்னதாக 204 ஆக இருந்த ரயில் சேவைகள் 164 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது..
சென்னை புறநகர் ரயில் சேவை
கடந்த சில நாட்களாகவே சென்னை புறநகர் ரயில் சேவையில் கடும் குளறுபடிகள் நிலவி வருகின்றன.. ரயில்கள் ஆங்காங்கே சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்படுவதால், ஆத்திரமடைந்த பயணிகள் வெள்ளிக்கிழமை தண்டவாளத்தில் இறங்கி நடந்த அவல நிலையும் அரங்கேறியது..
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பொத்தேரி போன்ற பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.. ஒரு இடத்திற்குச் சென்று சேர வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் வரை கூடுதலாகத் தேவைப்படுவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.. குறிப்பாக அலுவலக நேரங்களில் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால், முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்..
கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு
பயணிகளின் இந்த சிரமத்தை குறைக்க தெற்கு ரயில்வே சில மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது.. அதன்படி, எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன..
மேலும், பரங்கிமலை மற்றும் கூடுவாஞ்சேரி இடையே கூடுதல் சேவைகளை இயக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.. பரங்கிமலையில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி எழும்பூர் அல்லது சென்ட்ரல் பகுதிகளுக்கு விரைவாக செல்லலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.. இருப்பினும், இந்தத் தற்காலிக ரத்து மற்றும் தாமதங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வியலை வெகுவாக பாதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications