Madhampatti Rangaraj: ஜாய் கிரிஸில்டா புகார்! மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்! எத்தனை மணி நேர விசாரணையோ?
சென்னை: சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் புகாரின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
தனது அப்பா தங்கவேலுவின் கேட்டரிங் சர்வீஸை எடுத்து நடத்தி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி பாகஷாலா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சினிமா பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு விதவிதமான உணவை சமைத்து புகழ் பெற்றவர். இளநீர் இட்லி, பீட்ரூட் சட்னி, சிறுதானிய பணியாரம், கொய்யா துவையல் என விதவிதமாக சமைத்து அசத்தினார். இவரது சமையலில் மைதா, வெள்ளை சர்க்கரையை சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் செய்கிறார்.

இவர் எந்த ஊருக்கு சென்றாலும் சிறுவாணி நீரில்தான் சமைக்கிறார் (இதற்காக அரசிடம் முறையாக அனுமதி பெற்று). இவர் மெகந்தி சர்க்கஸ், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளியில் நடுவராக இருந்து வருகிறார்.
இவருக்கு மாமன் மகள் ஸ்ருதியுடன் திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திரைப்பட பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிஸில்டா, தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்றும் அவருக்கும் தனக்கும் கோயிலில் திருமணம் நடந்தது என்றும் அவரது குழந்தையை தான் சுமப்பதாகவும் பரபரப்பு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இதற்கெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலையும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து வயிற்றில் குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜாய், மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார். மேலும் தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும் அவதூறாக வெளியிட்ட வீடியோக்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலம் மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி ஜாய் கருத்துகளை வெளியிட்டு வருவதாக கடந்த 15 நாட்களில் ரூ 11 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த 17ஆம் தேதி நடந்தது. அப்போது ஜாய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கொடுத்திருந்த புகார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ஜாய் ஆஜரான போது அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நாளை (செப் 26) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் துணை ஆணையர் முன்பு ஆஜராகியுள்ளார். அவரிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடக்கும் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications