சொத்து வரி உயர்வில் விலக்கு? தயாராகும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. மேயர் பிரியா ஆர்வம்! முழுவிபரம்
சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் மக்களுக்கான அசத்தல் அறிவிப்புகளுடன் பட்ஜெட் தயாரிப்பில் மேயர் பிரியா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த பட்ஜெட்டில் சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து நிலைக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் இந்தியாவுக்கான நிதி நிலை அறிக்கை எனும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சியிலும் பட்ஜெட் தாக்கல் செய்வது நடைமுறையில் உள்ளது. கடந்த 2016 முதல் சென்னை மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தனர். இதனால் அதிகாரிகள் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
சென்னை டூ மதுரை.. தமிழை தேடி மாபெரும் பயணம் செல்லும் ராமதாஸ்.. அனைவரும் பங்கேற்க அழைப்பு
மேயர் பிரியாவின் முதல் பட்ஜெட்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த பிரியா தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேயராக பொறுப்பேற்ற சிறிது நாட்களில் அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை அதிகாரிகள் தான் தயாரித்து வழங்கி இருந்ததாகவும், இதில் சிறப்பு திட்டங்கள், மக்களை கவரும் அறிவிப்புகள் இல்லை என்ற பேச்சு இருந்தது.
பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரம்
இந்நிலையில் தான் 2023-24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை 2வது முறையாக மேயர் பிரியா தாக்கல் செய்ய உள்ளார். தற்போது பட்ஜெட் தயாரிக்கும் பணி மேயர் பிரியா தலைமையில் துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு பற்றி அவர் தனித்தனியே ஆலோசித்தார். மேலும் மண்டல குழு தலைவர்களிடம் வார்டு வாரியாக வரி சூல் மற்றும் செலவினங்கள் தொடர்பான கணக்கு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான திட்டங்கள் பற்றியும் அவர் கேட்டுள்ளார். ஜனவரி 25ம் தேதி அனைத்து குழுக்களுடான ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை
இந்த பட்ஜெட்டை மிகவும் கவனமாக தயாரித்து மக்களுக்கு பயனுள்ள வகையில் வழங்க மேயர் பிரியா திட்டமிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர் வடிகால், மேம்பாலம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டள்ளது. இதன் மூலம் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரி உயர்வு விலக்கு?
இந்நிலையில் தான் ஆலோசனைக்கு பிறகு நிலைக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், ‛‛கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் கவுன்சிலர்களாக நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். அதன்பிறகு முதல் முதலாக கவுன்சிலர்கள் ஆலோசனையில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 15வது நிதி ஆணைய பரிந்துரையில் ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் சூழல் உள்ளது. இதனால் 2023 - 24ம் நிதியாண்டிலும் சொத்துவரி உயர்த்தப்படலாம். இது நடந்தால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையில் சொத்துவரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளோம். இதுபற்றி ஆலோசனை நடக்கிறது. இதுதொடர்பாக மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்'' என்றனர்.