வார் ரூம் பிஸி! நேரடியாக களத்தில் இறங்கி.. இரவு முழுக்க பணி செய்த மேயர் பிரியா! புயலை வென்றது எப்படி
சென்னை: பெரும் புயல், பெரும் மழை தாக்கியும் சென்னை மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பி உள்ளது. புயல் அடித்த சுவடே தெரியாத அளவிற்கு சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் இந்த புயலை மிக சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த சீஸனின் முதல் புயல் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டை தாக்கியது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது.

புயல் தண்ணீர்
இந்த புயல் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே கனமழை பெய்து கொண்டு இருந்தது. வெள்ளிக்கிழமை மாலைக்கு பின் பேய் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்க போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. ஆனாலும் சென்னையில் பெரும்பாலும் எந்த பகுதியிலும் வெள்ளம் ஏற்படவில்லை. ஒரு சில பகுதிகளில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும், வெள்ளம் ஏற்படவில்லை. தண்ணீர் தேங்கிய இடங்களிலும் உடனே தண்ணீர் வேகமாக வடிந்தது. கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகள் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை என்பதால் அங்கு மட்டும் வெள்ளம் ஏற்பட்டது. மற்ற சாலைகளில் காலையில் பொழுது விடுவதற்குள் வெள்ளம் வடிந்துள்ளது.

வெள்ளம் வடிந்தது
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முழுக்க மழை பெய்தது. இங்கெல்லாம் சனிக்கிழமை காலை வெள்ளம் சட்டென வடிந்துள்ளது. அதே சமயம் சப் வே போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் இருக்க, ஸ்மார்ட் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இங்கெல்லாம் சிசிடிவி மூலமும், அதிகாரிகள் மூலமும் நேரடியாக கண்காணித்து தண்ணீர் தேங்காத வகையில் பணிகளை செய்துள்ளனர். லேசாக தண்ணீர் தேங்கினாலும் உடனடியாக அதை மோட்டார் வைத்து வெளியேற்றி உள்ளனர்.

மரங்கள்
அதேபோல் மரங்கள் விழுந்ததும் உடனடியாக அகற்றப்பட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்ட மரங்கள் நேற்று முதல்நாள் சாலையில் விழுந்தது. இந்த மரங்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் ஓரமாக வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து எங்கும் தடைப்படவில்லை. இந்த பணிகள் அனைத்தையும் மேயர் பிரியா நேரில் இருந்து கவனித்தது குறிப்பிடத்தக்கது. மேயர் பிரியா வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து மறுநாள் பிற்பகல் வரை களத்திலேயே இருந்துள்ளார். புயல் காரணமாக எங்கெல்லாம் மரம் விழுகிறது, மழை காரணமாக எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறது என்பதை நேரில் கண்காணித்து உள்ளார்.

வார் ரூம்
மழை காரணமாக வெளியே வர முடியாத நேரங்களில் வார் ரூமில் இருந்து சூழ்நிலைகளை கண்காணித்து உள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு பல இடங்களில் 11 செமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 25, மின்னல் (இராணிப்பேட்டை), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை) தலா 20, காஞ்சிபுரம் 19, செய்யார் (திருவண்ணாமலை) 18, ஆவடி (திருவள்ளூர்) 17, திருத்தணி (திருவள்ளூர்), காட்டுக்குப்பம் Agro (காஞ்சிபுரம்) தலா 16, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்) தலா 15, அரக்கோணம் (இராணிப்பேட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பெரம்பூர் (சென்னை) தலா 14, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 13 மழை பெய்துள்ளது.

மழை அளவு
அம்பத்தூர் (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, கொரட்டூர் ( திருவள்ளூர்), சென்னை விமான நிலையம் (சென்னை) தலா 12, திருவள்ளூர், பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), சிடி மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), டிஜிபி அலுவலகம் (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 11, மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), திருத்தணி PTO (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 10, மழை பெய்துள்ளது. ஆனால் இங்கெல்லாம் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.

பெரிய புயல் - சாதனை
இதில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுத்ததற்கு பின் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், மேயர் பிரியா ஆகியோரின் கடும் உழைப்பு உள்ளது. மிகப்பெரிய புயல் தாக்கியும், மிகப்பெரிய அளவில் மழை தாக்கியும் பெரும் சேதத்தில் இருந்து சென்னை தப்பித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் சரியான திட்டமிடல், கண்காணிப்பு, மேயரின் நேரடி ஆய்வுகள் இந்த புயலில் இருந்து சென்னை தப்பிக்க மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. முக்கியமாக செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் வெள்ளிக்கிழமை காலையே தண்ணீரை திறந்துவிட்டு, தமிழ்நாடு அரசு சுதாரிப்பாக செயல்பட்டு மிகப்பெரிய சேதத்தை தடுத்து உள்ளது.












Click it and Unblock the Notifications