இந்த சின்ன விசயத்தைக் கூட நாங்க சொல்லித்தான் அரசு செய்ய வேண்டுமா? - துரை முருகன்
மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருப்பதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார்.
சென்னை: எந்த ஒரு விசயமாக இருந்தாலும் திமுக அறிவித்த பிறகுதான் அரசு அறிவிக்கிறது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார்.
முதன்முறையாக மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டுடன் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 18ம் தேதி 18 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களை உடனே கட்டணத்தை செலுத்தச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்று அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே தமிழக முதல்வரிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. உள்ஒதுக்கீட்டின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். திமுக இந்த விசயத்தில் நாடகமாடுவதாகவும் தெரிவித்தார்.
கல்வி செலவு, விடுதி செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்கும் என்றும் இதற்கான சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக சொன்ன பிறகுதான் அரசு எதையுமே செய்கிறது என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த சின்ன விசயத்தைக் கூட ஸ்டாலின் அழுத்தம் கொடுத்த பிறகே முதல்வர் அறிவிக்கிறார் முதலிலேயே அறிவிக்க வேண்டும் என்ற புத்தி கூட இல்லை என்று தெரிவித்துள்ளார் துரை முருகன்.












Click it and Unblock the Notifications